2018-03-05 15:26:00

திருத்தந்தை பிரான்சிஸ், ஆஸ்ட்ரிய சான்சிலர் சந்திப்பு


மார்ச்,05,2018. ஆஸ்ட்ரியா நாட்டு சான்சிலர் (பிரதமர்) Sebastian Kurz அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, இத்திங்கள் காலையில் திருப்பீடத்தில் சந்தித்து கலந்துரையாடிய பின்னர், திருப்பீட செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், திருப்பீட பன்னாட்டு உறவுகள் துறையின் நேரடிப்பொதுச் செயலர், பேரருள்திரு Antoine Camilleri ஆகிய இருவரையும் சந்தித்துப் பேசினார்.

இச்சந்திப்புகள் குறித்து அறிக்கை வெளியிட்ட, திருப்பீட செய்தித் தொடர்பகம், திருப்பீடத்திற்கும், ஆஸ்ட்ரியாவுக்கும் இடையே நிலவும் நல்லுறவுகள், மனித வாழ்வு மற்றும் குடும்பம் பாதுகாக்கப்படுவதன் முக்கியத்துவம், சமுதாயத்தின் பொது நன்மையை, குறிப்பாக, நலிந்த மக்களின் நலனை ஊக்குவித்தல் போன்ற தலைப்புக்களில் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன என அறிவித்தது.

ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் ஆஸ்ட்ரியா ஆற்றிவரும் பணிகள், மக்கள் மத்தியில் ஒருமைப்பாடு ஏற்பட வேண்டியதன் அவசியம், அமைதி, அணு ஆயுத ஒழிப்பு, புலம்பெயர்வு உட்பட, தற்போதைய பல்வேறு பன்னாட்டு விவகாரங்கள் பற்றிய தகவல்களும், இச்சந்திப்புகளில் பகிர்ந்துகொள்ளப்பட்டன என்றும், திருப்பீட செய்தித் தொடர்பகம் கூறியது.

மேலும், வியட்நாம் நாட்டின் HàNôi பேராயர், கர்தினால் Pierre Nguyên Văn Nhon தலைமையில், அத் லிமினா சந்திப்பை மேற்கொண்டுள்ள, அந்நாட்டின் ஏறத்தாழ 32 ஆயர்களை, இத்திங்கள் காலையில், திருப்பீடத்தில் சந்தித்து கலந்துரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

வியட்நாம் ஆயர்கள், 2009ம் ஆண்டிற்குப்பின்னர், தற்போது முதன்முறையாக, அத் லிமினா சந்திப்பை மேற்கொண்டு வருகின்றனர்.

வியட்நாம் திருஅவையில், மூன்று உயர்மறைமாவட்டங்கள் உட்பட 26 மறைமாவட்டங்களின், 2,228 பங்குத்தளங்களில், 2,668 அருள்பணியாளர்கள் மறைப்பணியாற்றுகின்றனர்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.