2018-03-05 15:17:00

விசுவாசம் கண்கவர் காட்சியல்ல, கிறிஸ்துவைப்போல் சிந்திப்பது


மார்ச்,05,2018. மதமும், விசுவாசமும் கண்கவரும் காட்சியல்ல, மாறாக, இவை, இறைவார்த்தையும், தூய ஆவியாரும் நம் இதயங்களில் செயல்படுவதை உணர்வதாகும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் இத்திங்கள் காலையில் மறையுரையாற்றினார்.

தொழுநோயாளியான, சிரியா நாட்டு மன்னரின் படைத்தலைவர் நாமான் குணமடைந்தது பற்றிச் சொல்லும் முதல் வாசகம், இறைவாக்கினர் எவரும் தன் சொந்த நாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார் என இயேசு கூறியது பற்றிச் சொல்லும் நற்செய்தி வாசகம், இவையிரண்டையும் அடிப்படையாக வைத்து, மறையுரையில் விளக்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசு கிறிஸ்துவின் போதனைகளுக்கேற்ப, நம் சிந்தனைகளையும், சிந்திக்கப்படும் முறையையும் மாற்றுவது பற்றியும், கிறிஸ்துவோடு ஒத்திசைவது போல், நம் பணிகள் மற்றும் உணர்வுகளை மாற்றுவது குறித்தும், இத்தவக்காலத்தில் திருஅவை, நம்மைச் சிந்திக்க வைக்கின்றது என்று கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இறைவாக்கினர் எலிசா, தன்னைத் தொழுநோயிலிருந்து குணப்படுத்துவதற்கு கண்கவரும் நிகழ்வு ஒன்றை ஆற்றுவார் என, நாமான் எதிர்பார்த்தார், ஆனால், கடவுளின் குணப்படுத்தும் பாணி வேறு விதமாக இருந்தது என்றுரைத்த திருத்தந்தை, இயேசு நாசரேத் தொழுகைக்கூடத்திற்குச் சென்றபோதும், அவர் மீது, வியப்பு முதல் அவரைக் கொலைசெய்யும் ஆவல் வரை, மக்கள் அவர் பற்றி முரண்பட்ட கருத்துக்களைக் கொண்டிருந்தனர் என்று கூறினார்.

ஒருவர், விசுவாச அறிக்கை முழுவதையும், அல்லது, திருஅவையின் கோட்பாடுகளைச் சொல்லலாம், ஆனால் அவற்றை, கிறிஸ்தவ உணர்வோடு சொல்லவில்லையெனில் பயனில்லை என்றுரைத்த திருத்தந்தை, சிந்தனையைத் தெளிந்து தேர்ந்துகொள்ளும் அருளுக்காகவும், மனமாற்றத்திற்காகவும் இறையருளை மன்றாடுவோம் என்று கூறினார். மதம் கண்கவரும் காட்சி அல்ல, விசுவாசம் கண்கவரும் காட்சி அல்ல, மாறாக, இது இறைவார்த்தையும், தூய ஆவியாரும் நம் இதயங்களில் செயல்படுவதை உணர்வதாகும் என்று மறையுரையில் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் சிந்திக்கும் முறை மாறுவதற்கு இறைவனிடம் அருள் வேண்டுவோம் என்று கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.