மார்ச்,07,2018. சுற்றுச்சூழலை மையப்படுத்தி, கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில், மார்ச் 7, 8 ஆகிய இரு நாட்கள் நடைபெறும் ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கிற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை, பார்த்தலோமேயு அவர்களும் வாழ்த்துச் செய்திகளை அனுப்பியுள்ளனர்.
"'இறைவா உமக்கேப் புகழ்' திருமடலுக்குப் பின், அடிப்படையான, புரட்சிகரமான மனமாற்றம்" என்ற தலைப்பில் நடைபெறும் இக்கருத்தரங்கை தான் ஆசீர்வதிப்பதாக திருத்தந்தை தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இறைவனின் படைப்பு அனைத்திற்கும் இடையே உள்ள நெருக்கமானப் பிணைப்பைப் புரிந்துகொள்ளவும், அதை உலகறியச் செய்யவும், தன் சகோதரர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் இணைந்து, தானும் பணியாற்றுவதாக, முதுபெரும் தந்தை பார்த்தலோமேயு அவர்கள் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மனமாற்றம் என்பது ஒரு சில திருத்தங்களை மட்டும் கொணர்வது அல்ல; மாறாக, அது நம் கண்ணோட்டத்திலும், வாழ்வு முறையிலும் முழுமையான மாற்றங்களைக் கொணர்வது என்று முதுபெரும் தந்தை தன் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.
திருப்பீடத்தில் இயங்கிவரும், ஜார்ஜியா, ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து நாடுகளின் தூதரகங்கள் இணைந்து, கிரகோரியன் பாப்பிறை பல்கலைக் கழகத்தில் நடைபெறும் இக்கருத்தரங்கை, ஏற்பாடு செய்துள்ளன.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |