2018-03-07 16:39:00

வியட்நாம் Ho Chi Minh பேராயர் உரோம் நகரில் மரணம்


மார்ச்,07,2018. வியட்நாம் நாட்டின் ஆயர்கள் வத்திக்கானில் தங்கள் 'அத் லிமினா' சந்திப்பை மேற்கொண்டு வரும் இவ்வேளையில், Ho Chi Minh உயர் மறைமாவட்டத்தின் பேராயர், Paul Bùi Văn Đọc அவர்கள், மார்ச் 6, இச்செவ்வாய் பிற்பகல் இறைவனடி சேர்ந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

மார்ச் 2ம் தேதி முதல் தங்கள் 'அத் லிமினா' சந்திப்பை மேற்கொண்டு வரும் வியட்நாம் ஆயர்கள், இச்செவ்வாய் 11 மணியளவில், புனித பால் பசிலிக்காவில் நிறைவேற்றியக் கூட்டுத் திருப்பலியை தலைமையேற்று நடத்திய பேராயர் Văn Đọc அவர்களுக்கு திருப்பலியின் இறுதியில் மாரடைப்பு ஏற்பட்டது.

பேராயர் Văn Đọc அவர்கள், சான் கமில்லோ மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் பலனளிக்காமல், உயிர் துறந்தார்.

1944ம் ஆண்டு பிறந்த Văn Đọc அவர்கள், 1970ம் ஆண்டு அருள்பணியாளராகவும், 2000மாம் ஆண்டு ஆயராகவும் அருள்பொழிவு பெற்றார். 2014ம் ஆண்டு Ho Chi Minh பேராயராக பொறுப்பேற்ற Văn Đọc அவர்கள், 2013ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு முடிய, வியட்நாம் ஆயர் பேரவையின் தலைவராகவும் பணியாற்றினார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.