2018-03-09 15:03:00

இந்தியா, திருஅவையின் வருங்காலத்திற்கு நம்பிக்கை


மார்ச்,09,2018.  திருஅவையின் வருங்காலத்திற்கு ஏராளமான வாக்குறுதிகளை, இந்தியத் திருஅவை வழங்குகின்றது என்று, புதியவழி நற்செய்தி அறிவிப்பு பற்றி பெங்களூருவில் நடைபெற்ற கூட்டத்தில் கூறினார், திருப்பீட அதிகாரி ஒருவர்.

பாப்பிறை மறைப்பணி கழகங்கள் நடத்திய மூன்று நாள் கூட்டத்தில் உரையாற்றிய, நற்செய்தி அறிவிப்பு பேராயத்தின் இணைச் செயலரும், பாப்பிறை மறைப்பணி கழகங்களின் தலைவருமாகிய பேராயர், Giovanni Pietro Dal Toso அவர்கள், இவ்வாறு கூறினார்.

பாப்பிறை மறைப்பணி கழகங்களின் ஆரம்பம், அதன் நோக்கம் மற்றும் அதன் பணிகள் பற்றி எடுத்துரைத்த பேராயர் Dal Toso அவர்கள், இந்தியத் திருஅவை ஆற்றிவரும் நற்செய்திப் பணிகளைப் பாராட்டி ஊக்குவித்தார்.

2019ம் ஆண்டு அக்டோபர், சிறப்பு மறைப்பணி மாதமாகக் கடைப்பிடிக்கப்படுவது குறித்துப் பேசிய பேராயர் Dal Toso அவர்கள், இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மறைமாவட்டமும் இதற்குரிய தயாரிப்புக்களைத் தொடங்குமாறும், தலத்திருஅவைகளின் மேய்ப்புப்பணித் திட்டத்தில், நற்செய்தி அறிவிப்பு, மைய நிகழ்வாக அறிவிக்கப்படுமாறும் கேட்டுக்கொண்டார்.

பெங்களூருவில், மார்ச் 7ம் தேதி தொடங்கிய பாப்பிறை மறைப்பணி கழகங்களின் கூட்டம், மார்ச் 09, இவ்வெள்ளிக்கிழமையன்று நிறைவடைந்தது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.