2018-03-09 15:02:00

செப்டம்பர் 22-25ல் பால்டிக் நாடுகளுக்கு திருத்தந்தை


மார்ச்,09,2018. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருகிற செப்டம்பர் 22ம் தேதி முதல் 25ம் தேதி வரை, லித்துவேனியா, லாத்வியா, எஸ்டோனியா ஆகிய மூன்று பால்டிக் நாடுகளுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்வார் என்று, திருப்பீட செய்தித் தொடர்பாளர் Greg Burke அவர்கள், இவ்வெள்ளிக்கிழமையன்று அறிவித்தார்.

இந்நாடுகளின் தலைவர்கள் மற்றும் ஆயர்களின் அழைப்பின்பேரில், இத்திருத்தூதுப் பயணத்தை மேற்கொள்ளவிருக்கும் திருத்தந்தை, லித்துவேனியாவில், Vilnius மற்றும் Kaunas நகரங்களிலும், லாத்வியாவில், Aglona நகரிலும், எஸ்டோனியாவில், Tallinn நகரிலும், பயணத் திட்டங்களை நிறைவேற்றுவார் என்றும் அறிவித்துள்ளார், Greg Burke.

மேலும், லித்துவேனியா, லாத்வியா, எஸ்டோனியா ஆகிய மூன்று பால்டிக் நாடுகளில் திருத்தந்தை மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப் பயணங்களின் விருதுவாக்குகளும், இலச்சினைகளும் வெளியிடப்பட்டுள்ளன.

‘இயேசு கிறிஸ்து எம் நம்பிக்கை’, ‘ஓர் அன்னையாக தங்களைக் காண்பியுங்கள்’, ‘என் இதயமே விழித்தெழு’ ஆகிய தலைப்புக்களில், முறையே லித்துவேனியா, லாத்வியா எஸ்டோனியா ஆகிய நாடுகளில், திருத்தூதுப் பயணங்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்மாதம் 17ம் தேதி, இத்தாலியின் San Giovanni Rotondo மற்றும், Pietrelcinaவுக்கு மேய்ப்புப்பணி பயணம் மேற்கொண்டு, புனித பாத்ரே பியோ அவர்கள் கல்லறையைத் தரிசித்து, அவரின் பரிந்துரையைக் கேட்கவுள்ளார் என்று, கப்புச்சின் துறவு சபை அதிபர் அருள்பணி Antonio Belpiede அவர்கள் அறிவித்துள்ளார். ஐந்து காய வரம் பெற்றிருந்த புனித பாத்ரே பியோ அவர்கள், அக்காயங்கள் முதலில் தோன்ற ஆரம்பித்த நூறாம் ஆண்டின் (2018) நிறைவு, அவர் மரணமடைந்ததன் ஐம்பதாம் ஆண்டு நிறைவு ஆகிய இரு நிகழ்வுகளையொட்டி திருத்தந்தை இம்மேய்ப்புப்பணி பயணத்தை மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.