2018-03-10 14:34:00

தவக்காலம் 4ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


மார்ச் 11, இஞ்ஞாயிறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் துறவற வாழ்வில் 60 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். மார்ச் 13, வருகிற செவ்வாயன்று, அவர், திருஅவைத் தலைவராகப் பொறுப்பேற்று, ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்கிறார். இயேசு சபைத் துறவியாக, வைர விழாவையும், திருஅவையின் தலைவராக ஐந்து ஆண்டு பணிவாழ்வையும் கொண்டாடும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, இறைவன் நிறைவாக ஆசீர்வதிக்க மன்றாடுவோம்.

தவக்காலத்தின் 4ம் ஞாயிறை, 'அகமகிழ்தல்' ஞாயிறெனக் கொண்டாடுகிறோம். எருசலேமுடன் இணைந்து அகமகிழவும், அக்களிக்கவும் நம்மை அழைக்கும் இன்றையத் திருப்பலியின் வருகைப் பல்லவியிலிருந்து (எசாயா 66:10), இந்த ஞாயிறு, 'அகமகிழ்தல்' ஞாயிறு என்ற பெயரைப் பெற்றுள்ளது.

அகமகிழ்தல், (அகம் + மகிழ்தல்) அல்லது, அக்களித்தல் (அகம் + களித்தல்) என்ற இரு சொற்களிலும், 'அகம்' என்ற சொல் முக்கியமானது. நமது அகம், அதாவது, நமது உள்ளம், நிறைவடையும்போது உருவாவதே, உண்மையான மகிழ்வு. இதற்கு மாறாக, உள்ளத்தில் வெற்றிடம், வெறுப்பு, வேதனை, ஆகியவை நிறைந்திருக்கும்போது, வெளிப்புறமாக சிரித்து, குதித்து, கும்மாளமிட்டு மகிழ்வை வெளிப்படுத்துவது, போலியான மகிழ்வாக அமையும். தவக்காலத்தில், மன்னிப்பு, ஒப்புரவு ஆகிய அனுபவங்களால், நமது உள்ளங்கள் நிறைவடையும்போது உருவாகும் உண்மையான மகிழ்வைக் கொண்டாட, திருஅவை இன்று நம்மை அழைக்கிறது. இந்த மகிழ்வின் சில அம்சங்களைப் புரிந்துகொள்ள, நாம் ஒரு சிறைச்சாலைக்குச் செல்வோம்.

சில ஆண்டுகளுக்கு முன், 'நியூ யார்க் டைம்ஸ்' செய்தித்தாளில் ஒரு சிறைச்சாலையை மையப்படுத்தி வெளியான ஒரு செய்தி, உண்மையான மகிழ்வைப் புரிந்துகொள்ளவும், இன்றைய நற்செய்தி சொல்லும் உண்மைகளை உணர்ந்துகொள்ளவும் உதவியாக இருக்கும். அமெரிக்காவின், கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ஒரு சிறைக்கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு மாற்று முயற்சியைப் பற்றிய செய்தி அது. (The Vanishing Mind - Life, With Dementia: NYTimes, Feb.25,2012) அச்செய்தியுடன் இணைக்கப்பட்டிருந்த புகைப்படம், முதலில் நம் கவனத்தை ஈர்க்கிறது. சிறைக்கூடங்களுக்கே உரிய மிக உயர்ந்த சுவர்களும், அச்சுவர்களின் மேல்மட்டத்தில் முள்கம்பி வலைகளும் அந்தப் புகைப்படத்தின், பின்னணியாக அமைந்தன. அந்த முள்கம்பி வலைகளில் 24 மணி நேரமும் மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. இந்தப் 'பாதுகாப்பு'ச் சுவர் பின்னணியில் இருக்க, முன்னணியில் நாம் காண்பது இதுதான்... ஒரு கறுப்பின மனிதர், வயது முதிர்ந்த வெள்ளை இன மனிதர் ஒருவரின் தோள்மீது ஆதரவாய் கரம்வைத்திருப்பதைப் போல் அப்படம் எடுக்கப்பட்டிருந்தது. கறுப்பினத்தவருக்கு 50 வயதிருக்கலாம். வெள்ளை இனத்தவருக்கு, 80 வயதிருக்கலாம். கறுப்பின மனிதரான Sacel Montgomery அவர்களின் கண்களில் வெளிப்பட்ட கனிவு, அந்தப் புகைப்படத்தில் அழகாகப் பதிவாகியிருந்தது.

கலிபோர்னியாவில் உள்ள அந்த கடுங்காவல் சிறைக்கூடத்தில் உள்ளவர்கள் அனைவரும் கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு, தண்டனை அனுபவிப்பவர்கள். அவர்களில் ஒருவரான Sacel அவர்கள், ஒரு பெண்ணை பலமுறை கத்தியால் குத்தி கொலை செய்தவர். 25 ஆண்டுகளாக அந்தச் சிறையில் இருக்கிறார். சிறையிலும், பலமுறை, காவல் துறையினரோடும், மற்ற கைதிகளுடனும் கைகலப்பில் ஈடுபட்டவர்.

2012ம் ஆண்டின் துவக்கத்தில், சிறை அதிகாரிகள் Sacel அவர்களிடம் ஒரு பொறுப்பைக் கொடுத்தனர். அவருக்கு மட்டுமல்ல... சிறையில், நல்ல உடல் நிலையில் இருந்த பலருக்கும் அந்தப் பொறுப்பு கொடுக்கப்பட்டது. அதே சிறையில், பல ஆண்டுகளாக அடைபட்டிருக்கும் ஒரு சில கைதிகள், Alzheimer's எனப்படும் நினைவுமறதி நோயினால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யும் பொறுப்பு, Sacel அவர்களுக்கும், மற்ற கைதிகளுக்கும் கொடுக்கப்பட்டது. நோயுற்ற இந்த கைதிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும், காலை முதல் மாலை வரை, இவர்கள் செய்தனர். உணவூட்டுதல், குளிப்பாட்டுதல், சக்கர நாற்காலியில் வைத்து அவர்களைத் தள்ளிச் செல்லுதல் என, பல உதவிகளை இவர்கள் செய்தனர். இந்தப் பணிகளால், சிறைக் கைதிகள் மத்தியில் உருவான தோழமை, அந்தச் சிறைக்கூடத்தில் வெளிப்பட்ட மகிழ்வு, அமைதி இவற்றைப்பற்றி அந்தச் செய்தி விளக்கமாகக் கூறியது.

சிறைக்கூடங்கள் என்றதுமே, குற்றம், தண்டனை, வெறுப்பு, கொடுமை, என்ற முற்சார்பு எண்ணங்களே (Prejudice) நம் மனதை அதிகம் ஆக்கிரமிக்கும். சிறைக்குள்ளும் கனிவு இருக்குமா? நிச்சயம் இருக்கிறது. கனிவு, பாசம், பரிவு, அன்பு என்ற உன்னத உணர்வுகள் நுழைய முடியாத இடங்கள் இருக்கவே முடியாது என்று ஆணித்தரமாகச் சொல்லலாம். கலிபோர்னியா சிறையில் நடப்பது, உலகின் பல சிறைகளில் நடைபெறுகின்றது. ஆனால், சிறைகளில் நடக்கும் கலவரங்களை, கொலைகளை தலைப்புச் செய்திகளாகத் தரும் நமது ஊடகங்கள், இத்தகைய ‘நற்செய்திகளை’ நமக்குச் சொல்வது, மிக, மிக அபூர்வம்.

கலிபோர்னியா சிறையில் நிகழ்ந்துவரும் மாற்றம், இன்றைய நற்செய்திக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. குற்றம் புரிந்தவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள், அவர்களது வாழ்வில், தற்காலிகமான, மேலோட்டமான, மாற்றங்களை உருவாக்கலாம். ஆனால், சிறைக்கூடங்களில் பரிவும், பாசமும், வெளிப்படும்போது, அவை, குற்றவாளிகளில், நிரந்தரமான மாற்றங்களை உருவாக்கி, அவர்கள் மீண்டும் மனிதர்களாக வாழ வைத்துள்ளன என்பதை நாம் அறிவோம். இதுவே, அவர்கள் அடையும் மீட்பென நாம் கருதலாம்.

மீட்பு என்றதும், சட்டப்படி, தண்டனையிலிருந்து தப்பிப்பதை மட்டும் சொல்லவில்லை. சிலசமயங்களில், சிறையிலிருந்து விடுதலை கிடைக்காவிட்டாலும், சிறைக்குள்ளேயே அவர்கள் வாழ்வு பெருமளவு மாறியுள்ள உண்மைகளும் நாம் அறிந்ததே. இந்த வாழ்வு மாற்றம் அவர்களுக்குள்ளிருந்து வரலாம். அல்லது, வெளியிலிருந்து வரலாம். வெளியிலிருந்து, பார்வையாளர்களாக, அல்லது ஆலோசனை வழங்குபவர்களாகச் செல்வோர், பல்வேறு எண்ணங்களைச் சொல்லும்போது, சிறைக்குள் இருப்பவர்கள், "வெளியில இருந்துகிட்டு இப்படி பேசுறது ஈசிங்க... நாங்க இருக்கிற நிலையில நீங்க இருந்து பாருங்க, அப்பத் தெரியும் எங்கப் பிரச்சனை, போராட்டம் எல்லாம்" என்று சொல்லும் பதிலையும் நாம் கேட்டிருக்கிறோம்.

வெளியிலிருந்து வரும் போதனைகளால் பயனில்லை எனில், வேறு வழி என்ன? மற்றொரு வழியை நாம் இவ்வாறு கற்பனை செய்து பார்க்கலாம். குற்றமற்ற ஒருவர், சிறைப்பட்டோரைத் திருத்தவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன், அவர்கள் மத்தியில் தானும் ஒரு கைதியாக வாழ முன்வருகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர்களில் ஒருவராகவே மாறிவிட்ட அவர், கைதிகள் மீது அன்பும், பாசமும் காட்டி, அவர்களை நல்வழிப்படுத்த முடியும். இதை நாம் கற்பனையாக எண்ணிப் பார்க்கலாம். நடைமுறையில், சட்ட வழிமுறையில், இது சாத்தியமா என்று தெரியவில்லை.

இதையொத்த ஓர் உண்மை, நம் மீட்பு வரலாற்றில் சாத்தியமானது. பாவங்களால் சிறைப்பட்ட உலகை மீட்பது எப்படி என்று கேள்வியும், பரிதவிப்பும் எழுந்தபோது, இறைவன் அதற்கு விடை பகர்ந்தார். மனிதரின் மீட்பு மனிதரிடமிருந்தே வரவேண்டும் என்று தீர்மானித்தார். தன் மகனை, மனிதரில் ஒருவராக அனுப்பிவைத்தார். இந்த எண்ணத்தை வெளிப்படுத்தும் ஒரு விவிலிய வாக்கியம், இன்று, நமது நற்செய்தியில் பறைசாற்றப்பட்டுள்ளது. “தம் ஒரே மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார்.” (யோவான் 3: 16)

விவிலிய வாக்கியங்கள், குறிப்பாக, நான்கு நற்செய்திகளின் வாக்கியங்கள் பல, மேற்கோள்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வாக்கியங்களிலேயே மிக அதிக அளவில் மேற்கோளாகப் பயன்படுத்தப்பட்டுள்ள ஒரு வாக்கியம் உள்ளது  என்றால், அது நாம் இப்போது வாசித்த இறைவாக்கியம் - யோவான் 3:16 - என்று உறுதியாகச் சொல்லலாம். இந்த வாக்கியம் "நற்செய்திகளின் நற்செய்தி" (Gospel of the gospels) என்று சொல்லப்படுகிறது. அன்பின் ஆழத்தைச் சொல்லும் ஓர் இலக்கணம் இது.

அன்பின் ஆழத்தைக் கூறும் பல நூறு கதைகளைக் கேட்டிருக்கிறோம். இந்தக் கதைகளில் சொல்லப்படுவதெல்லாம் ஒரு சில நாட்களில், மணித்துளிகளில் காட்டப்படும் ஆழமான அன்பு உணர்வுகள். இந்த உணர்வுகள் உண்மையானவை, உன்னதமானவைதான். ஆனால், கலிபோர்னியா சிறையில், ஒவ்வொரு நாளும், திரும்பத் திரும்ப நிகழும் அன்புச் செயல்கள், கதைகளாக வெளிவருவதில்லை. அதேபோல், அன்பை வெளிப்படுத்தும் எத்தனையோ நிகழ்வுகள், நம் தனிப்பட்ட வாழ்விலும், நம் குடும்பங்களிலும், ஒவ்வொரு நாளும், நிகழ்ந்தவண்ணம் உள்ளன. இவை, கதைகளாக வெளிவருவதில்லை.

'அகமகிழ்தல்' ஞாயிறன்று, நேரம் ஒதுக்கி, நமது குடும்பங்களில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை அசைபோடுவோம். ஒவ்வொரு நாளும் நடக்கும் இந்தச் சின்னச் சின்ன நிகழ்வுகளில் சொல்லாமல் சொல்லப்படும் உன்னத அன்பு உணர்வுகளை இன்று அசைபோடுவோம்.

பல குடும்பங்களில், உடல்நலம், மனநலம் குன்றிய குழந்தைகள், வாழ்க்கைத் துணை, பெற்றோர் என்று, எத்தனையோ பேருக்கு, ஒவ்வொரு நாளும், தாய், தந்தை, கணவன், மனைவி, உடன்பிறந்தோர் என்று, ஒவ்வொருவரும் செய்யும் சேவைகள் அற்புதமானவை. அவற்றை, சேவைகள் என்று கூட அவர்கள் கருதுவதில்லை, கூறுவதில்லை. இந்த உன்னதமான உண்மை நிகழ்வுகள், எந்தப் பத்திரிக்கையிலும், புத்தகத்திலும் வெளியாவதில்லை. பத்து, இருபது, முப்பது, நாற்பது என்று, பல ஆண்டுகள், ஒவ்வொரு நாளும் தொடரும் இந்த அன்புப் பணிகளை, கதைகளாக, ஒரு சில பக்கங்களில் சொல்லிவிடவும் முடியாது. வெளி உலகிற்கு தெரியாத வண்ணம், ஒவ்வொரு நாளும், அன்புப் பணியில் தங்களையே தகனமாக்கும் ஆயிரமாயிரம் அன்பு இதயங்களுக்காக, இறைவனிடம் இன்று சிறப்பாக நன்றி சொல்வோம்.

'அன்பு' என்ற இந்த உன்னதமான உண்மைக்கு, பல விபரீதமான இலக்கணங்களைப் புகட்டிவரும் உலகப் போக்கையும் இன்று சிந்திக்காமல் இருக்க முடியவில்லை. உண்மையான அன்பை, மகிழ்வை வெளிச்சத்திற்கு வரவிடாமல் தடுத்து நிறுத்தும் இருளைக் குறித்து இன்றைய நற்செய்தியின் பிற்பகுதி இவ்வாறு சொல்கிறது:

யோவான் 3: 19-20

ஒளி உலகிற்கு வந்திருந்தும் தம் செயல்கள் தீயனவாய் இருந்ததால் மனிதர் ஒளியைவிட இருளையே விரும்பினர்... தீங்கு செய்யும் அனைவரும் ஒளியை வெறுக்கின்றனர். தங்கள் தீச்செயல்கள் வெளியாகிவிடும் என அஞ்சி அவர்கள் ஒளியிடம் வருவதில்லை.

இருளுக்கு அதிகம் பழகிவிட்டால், ஒளி நம்மைத் துன்புறுத்தும். வேதனையான இந்த உண்மையை, வேடிக்கையான முறையில் கூறும் கதை ஒன்று நினைவுக்கு வருகிறது.

பாலை நிலத்தைக் கடந்துகொண்டிருந்தார், ஒரு வழிபோக்கர். இரவாகிவிட்டதால், அங்கேயே கூடாரம் அடித்துத் தங்கினார். நள்ளிரவில், திடீரென, அவருக்கு, பசி வயிற்றைக் கிள்ளியது. தன்னிடம், ஒரு சிறு மூட்டையில், அத்திப் பழங்கள் இருந்தன என்பது நினைவுக்கு வந்தது. எழுந்தார், விளக்கை ஏற்றினார், அத்திப்பழ மூட்டையை அவிழ்த்தார். முதல் பழத்தை எடுத்துக் கடித்தபோது, பழத்துக்குள் இருந்து புழு ஒன்று வந்ததைப் பார்த்தார். எனவே, அந்தப் பழத்தைத் தூக்கி எறிந்தார். அடுத்தப் பழத்தைக் கடித்தார். அதற்குள்ளிருந்தும் புழு வந்ததைப் பார்த்தார். விளக்குக்கு அருகே கொண்டு சென்று ஆராய்ந்தார். புழு நன்றாகவேத் தெரிந்தது. அதையும் தூக்கி எறிந்தார். அடுத்தப் பழத்தை எடுத்து விளக்கின் அருகே கொண்டு செல்லும்போதே உள்ளே புழு இருப்பது தெரிந்தது. இப்படியே ஆய்வு செய்துகொண்டிருந்தால், தான் சாப்பிட ஒரு பழமும் இருக்காது என்று அவர் உணர்ந்தார். உடனே அவருக்கு ஓர் எண்ணம் எழுந்தது. விளக்கை அணைத்து விட்டு, மீதிப் பழங்களை இருளில் சாப்பிட்டு முடித்தார்.

இந்தக் கதைக்கு பெரிய விளக்கங்கள் தேவையில்லை. மனசாட்சி என்ற விளக்கை அணைத்துவிட்டால், பூச்சியும், புழுவும் மண்டிக்கிடக்கும் நம் எண்ணங்களெல்லாம் சரியென்றே தோன்றும். நமது 'பசிகளும்' அடங்கிவிட்டதாகத் தோன்றும்.

இதற்கு நேர் மாறாக, உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள். இதனால் அவர்கள் செய்யும் அனைத்தையும் கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள். (யோவான் 3: 21) என்று இன்றைய நற்செய்தியின் இறுதியில் ஓர் அழைப்பை, இறைமகன் கிறிஸ்து நமக்கு விடுக்கிறார்.

மார்ச் 9, இவ்வெள்ளியன்று, "A Wrinkle in Time" என்ற திரைப்படம் வெளியிடப்பட்டது. இத்திரைப்படத்தின் முன்னோட்ட (Trailer) காணொளியில் இடம்பெறும் ஓர் அழகிய வாக்கியம் இது: “ஒளியாக மாறுவதே, இருளை வெல்வதற்கு ஒரே வழி.” – “The only way to defeat the darkness is to become the Light.”

கிறிஸ்து என்ற ஒளியை நெருங்கிச் செல்ல, அவரைப்போல் ஒளியாக மாற நமக்கு விடுக்கப்படும் அழைப்பை ஏற்போமா? அல்லது இருளில் நம்மேயே மறைத்துக்கொண்டு, சுகம் காண்போமா?

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.