2018-03-11 10:02:00

திருத்தந்தைக்காக போலந்து திருஅவை தொடர் செபம்


மார்ச்,10,2018. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கத்தோலிக்கத் திருஅவையின் தலைமைப்பணியை ஏற்று, ஐந்தாண்டுகள் நிறைவடையவிருக்கின்றவேளை, போலந்து திருஅவை, திருத்தந்தைக்காக, தொடர் செப நடவடிக்கை ஒன்றைத் திட்டமிட்டுள்ளது.

“எல்லாருக்காகவும் ஒருவர், ஒருவருக்காக எல்லாரும்” என்ற தலைப்பில் நடைபெறவுள்ள இந்த தொடர் செப நடவடிக்கையில் அனைவரும் இணையுமாறு கேட்டுக்கொண்டுள்ளார், போலந்து ஆயர் பேரவைத் தலைவர், பேராயர், Stanisław Gądecki.

மார்ச் 11, இஞ்ஞாயிறன்று ஆரம்பிக்கப்படவுள்ள இச்செப நடவடிக்கை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனக்காகச் செபிக்குமாறு விண்ணப்பித்து வருவதற்குப் பதிலளிப்பதாக அமைந்துள்ளது என்று கூறியுள்ள, பேராயர், Gądecki அவர்கள், நான் உங்களுக்காகச் செபிக்கின்றேன், நீங்கள் எனக்காகச் செபியுங்கள் என்று, பானமாவில் உலக இளையோர் விழாவில் திருத்தந்தை கூறியதையும் நினைவுபடுத்தியுள்ளார்.

போலந்தில் 25க்கும் மேற்பட்ட நிறுவனங்களும், ஏராளமான மக்களும், இச்செப நிகழ்வில் பங்கேற்பதற்கு உறுதியளித்துள்ளனர் என, தலத்திருஅவை அறிவித்துள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கத்தோலிக்கத் திருஅவையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மார்ச் 13ம் நாளன்று, போலந்து ஆயர்கள், இறை இரக்க திருத்தலத்தில், திருத்தந்தைக்காகச் செபிக்கவுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.