2018-03-12 15:26:00

ஜெர்மன் கர்தினால் Karl Lehmann, இறைபதம் சேர்ந்தார்


மார்ச்,12,2018. ஜெர்மன் நாட்டின் 81 வயது நிரம்பிய கர்தினால் Karl Lehmann அவர்கள் இஞ்ஞாயிறு காலை இறைபதம் சேர்ந்தார்.

கர்தினாலின் மறைவையொட்டி, திருத்தந்தை பிரானசிஸ் அவர்கள், ஜெர்மனியின் Mainz ஆயர் Peter Kohlgraf அவர்களுக்கு அனுப்பியுள்ள இரங்கல் தந்தியில், கர்தினால் Lehmann அவர்கள், ஜெர்மன் ஆயர் பேரவையின் தலைவராக நீண்ட காலம் ஆற்றியுள்ள சேவைகளைப் பாராட்டியுள்ளதோடு, அவரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக செபிப்பதாகவும் உறுதி கூறியுள்ளார்.

ஜெர்மனியின் Mainz மறைமாவட்டத்தின் ஆயராக பணியாற்றி 2016ம் ஆண்டு ஓய்வுபெற்ற கர்தினால் Lehmann அவர்கள், திருஅவையில், புரிந்துகொள்ளல், ஒப்புரவு மற்றும் கலந்துரையாடல்களின் பாலங்களை கட்டியெழுப்ப பெருமளவில் உதவியுள்ளார் என ஜெர்மன் தலத்திருஅவை பாராட்டியுள்ளது.

கிறிஸ்தவ சபைகளுக்கிடையே மட்டுமல்ல, கிறிஸ்தவர்களுக்கும் ஏனைய மதத்தவர்களுக்குமிடையே உறவை மேம்படுத்த, கர்தினால் Karl Lehmann அவர்கள் சிறப்புப் பங்காற்றியுள்ளார் என்று, ஜெர்மன் சான்சிலர் ஆஞ்சலா மெர்க்கல் அவர்களும் தன் பாராட்டுக்களை வெளியிட்டுள்ளார்.

1936ம் ஆண்டு மே மாதம் 16ம் தேதி ஜெர்மனியின் Sigmaringen எனுமிடத்தில் பிறந்த கர்தினால் Karl Lehmann அவர்கள், 2005ம் ஆண்டு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களைத் தேர்ந்தெடுத்த கர்தினால்கள் அவைக்கூட்டத்திலும், 2013ம் ஆண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைத் தேர்வுச் செய்த கர்தினால்கள் அவைக்கூட்டத்திலும் பங்கு பெற்றுள்ளார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.