2018-03-14 16:17:00

இயேசு சபை புலம்பெயர்ந்தோர் பணிக்குழுவின் கவலை


மார்ச்,14,2018. இங்கிலாந்தில் உள்ள Harmondsworth குடிபுகுவோர் மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களின் நிலை மிக மோசமாக உள்ளது என்று வெளியான ஓர் அறிக்கையையொட்டி, அந்நாட்டில் பணியாற்றும் இயேசு சபை புலம்பெயர்ந்தோர் பணிக்குழு தன் கவலையையும், கண்டனத்தையும் வெளியிட்டுள்ளது.

Harmondsworth மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள், தேவைக்கு அதிகமான காலம் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும், அந்த மையத்தில் நிலவும் வசதிகள் தரம் குறைந்த நிலையில் உள்ளன என்றும் பிரித்தானிய அரசு சிறைக்கூடங்களின் கண்காணிப்புக் குழு அறிக்கையொன்றை இச்செவ்வாயன்று வெளியிட்டுள்ளது.

அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை, கவலை தருவதாகக் கூறிய இயேசு சபை புலம்பெயர்ந்தோர் பணிக்குழு, கால வரையறை ஏதுமின்றி குடிபெயர்ந்தோரை தடுத்து வைப்பது, மனித உரிமை மீறலின் கொடுமையான வெளிப்பாடு என்று கூறியுள்ளது.

Harmondsworth மையத்தில் 23 பேர், ஓராண்டுக்கு மேலாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்களில் ஒருவர், இந்த மையத்தில் 4 ஆண்டுகள் 6 மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்றும், இயேசு சபை புலம்பெயர்ந்தோர் பணிக்குழுவின் அறிக்கை கூறுகிறது.

2017ம் ஆண்டு, மையத்தில் நுழைந்த 27,331 பேரில், 53 விழுக்காட்டினர் மட்டுமே மீண்டும் சமுதாயத்தில் நுழைவதற்கு அனுமதிக்கப்பட்டனர் என்று இயேசு சபை புலம்பெயர்ந்தோர் பணிக்குழுவின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. 

ஆதாரம் : ICN/JRSUK / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.