2018-03-14 16:01:00

"திருஅவையில் மாற்றங்கள் திருஅவையின் மாற்றம்" - கருத்தரங்கு


மார்ச்,14,2018. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமைப்பணியில், கத்தோலிக்கத் திருஅவை, நற்செய்தி அறிவிப்புப் பணியுடன் கூடிய ஒரு மாற்றத்தை அடைந்து வருகிறது என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், பன்னாட்டுக் கருத்தரங்கில் கூறினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஐந்து ஆண்டு தலைமைப்பணியைச் சிறப்பிக்கும் வகையில், உரோம் நகரின் உர்பானியா பல்கலைக் கழகத்தில் நடைபெறும் ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கை, நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவர், கர்தினால் பெர்னாண்டோ ஃபிலோனி அவர்கள், துவக்கி வைத்த வேளையில் இவ்வாறு கூறினார்.

கலாச்சாரம், தொழில்நுட்பம், அரசியல் என்ற பல தளங்களில் உருவாகிவரும் துரித மாற்றங்கள், திருஅவையையும் பாதிக்கின்றன என்று தன் உரையில் சுட்டிக்காட்டிய கர்தினால் பிலோனி அவர்கள், திருஅவையில் நிகழும் மாற்றங்கள், மேம்போக்கான மாற்றங்கள் அல்ல என்பதையும் வலியுறுத்திக் கூறினார்.

"திருஅவையில் மாற்றங்கள் திருஅவையின் மாற்றம்" என்ற தலைப்பில் மார்ச் 13, இச்செவ்வாய் முதல், 15 இவ்வியாழன் முடிய நடைபெறும் இக்கருத்தரங்கில், இரண்டாம் வத்திக்கான் சங்கத்தால் திருஅவையில் துவங்கிய மாற்றங்கள், திருத்தந்தையர் 6ம் பால், 2ம் ஜான் பால், 16ம் பெனடிக்ட், மற்றும் பிரான்சிஸ் ஆகியோரின் முயற்சிகளால் முன்னெடுத்துச் செல்லப்படுவது குறித்து விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.