2018-03-20 14:34:00

இமயமாகும் இளமை – தூண்டுதலாக, துணையாக இருக்கும் தந்தை


2011ம் ஆண்டு, டிசம்பர் மாதம் ஒரு நாள், கிரண் கனோஜியா (Kiran  Kanojia) என்ற இளம்பெண், ஹைதராபாத் இரயில் நிலையத்திலிருந்து பயணமானார். தகவல் தொழில்நுட்பத் துறையில் பொறியாளராகப் பணியாற்றி வந்த கிரண் அவர்கள், தன் 21வது பிறந்தநாளை, பெற்றோருடன் கொண்டாட சென்றுகொண்டிருந்தார்.

அந்த துரித இரயில் புறப்பட்ட சிறிது நேரத்தில், இரு இளைஞர்கள், கிரண் அவர்களின் கைப்பையைப் பறிக்க முயன்றனர். அப்போது நிகழ்ந்த போராட்டத்தில், அவ்விரு இளைஞர்கள், கிரண் அவர்களை, ஓடும் இரயிலிலிருந்து வெளியே தள்ளிவிட்டனர்.

இந்த விபத்தில் தன் இடது காலை இழந்த கிரண் அவர்கள், ஒட்டப்பந்தயங்களில் பயன்படுத்தப்படும் சிறப்பு வடிவத்தில் செய்யப்பட்ட செயற்கைக் காலுடன், நீண்ட தூர ஒட்டப்பந்தயங்களில் பங்கேற்று வருகிறார். 2014ம் ஆண்டு நடைபெற்ற 'ஏர்டெல் மாரத்தான்' போட்டியில் தன் முதல் பதக்கத்தை வென்றார் கிரண். பாராலிம்பிக் விளையாட்டுகளில் பங்கேற்று, இந்தியாவுக்கு பதக்கம் பெற்றுத் தருவதை தன் கனவாக, இலட்சியமாகக் கொண்டு, பயிற்சிகள் எடுத்து வருகிறார். தன்னை இவ்வளவு தூரம் ஊக்குவித்து, உற்சாகப்படுத்த, தன் தந்தை எப்போதும் தன்னுடன் இருக்கிறார் என்று, கிரண் அவர்கள், தன் பேட்டிகளில் கூறிவருகிறார்.

மார்ச் 18, ஞாயிறு, தென் கொரியாவின் Pyeongchang நகரில், மாற்றுத்திறனாளிகளின் குளிர்கால பாராலிம்பிக் விளையாட்டுக்கள் நிறைவடைந்தன. மார்ச் 19, திங்கள், புனித யோசேப்பு திருநாளன்று, உலகின் பல நாடுகளில் தந்தை நாள் கொண்டாடப்பட்டது. மாற்றுத்திறன் கொண்ட பல இளையோர் தங்கள் கனவுகளை நனவாக்க, தூண்டுதலாக, துணையாக இருந்துவரும் தந்தையருக்குத் தலை வணங்குவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.