2018-03-20 16:46:00

இறைஊழியர் அ.பணி லெவே சே.ச. நினைவு நாள் மார்ச் 21


மார்ச்,20,2018. இறைஊழியர் அருள்பணி லெவே சே.ச. அவர்களின் நினைவு நாளான, மார்ச் 21, இப்புதன்கிழமை மாலை 6 மணிக்கு, சருகணி திரு இதயங்களின் ஆலய மைதான மேடையில், சிவகங்கை மறைமாவட்ட மேதகு ஆயர் செ.சூசைமாணிக்கம் அவர்கள் தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்படுகின்றது. 

இப்புதன்கிழமை காலை 5.30 மணிக்கு, அருள்பணி லெவே சே.ச. அவர்களின் கல்லறையில் திருப்பலியும், மாலை 5 மணிக்கு இறைபுகழ் வழிபாடும் நடைபெறும்.

தமிழகத்தின் சிவகங்கை மறைமாவட்டத்தில், சின்ன அருளானந்தர் எனச் செல்லமாக அழைக்கப்படுபவர், இயேசு சபை அருள்பணி லூயி லெவே. இவர், பிரான்ஸ் நாட்டில் 1884ம் ஆண்டில் பிறந்து, இயேசு சபையில் சேர்ந்து, மதுரை மறைப்பணித்தளத்தில் நற்செய்திப் பணிசெய்யும் ஆர்வத்தில், 1908ம் ஆண்டில், தனது 24வது வயதில், தமிழகம் வந்து சேர்ந்தார். சிவகங்கை மறைமாவட்டத்திலே தனது இறப்புவரை, அதாவது 1973ம் ஆண்டு மார்ச் 21ம் தேதி வரை ஆன்மீகப் பணியாற்றினார். அருள்பணி லூயி லெவே அவர்கள், இந்தியா வந்த பின்னர், தனது தாயகமான பிரான்ஸ் நாட்டிற்குச் செல்லவே இல்லை. இம்மாமனிதரை புனிதர் நிலைக்கு உயர்த்துவதற்கான முதல் கட்டப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, அவர் பற்றிய மேலும் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. ”ஓ இயேசுவே, அன்பின் அரசரே, உமது அன்புள்ள இரக்கத்தை நம்புகிறேன்” என்னும் சிறிய செபத்தை இவர் அடிக்கடி சொல்வார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.