2018-03-20 16:28:00

திருத்தந்தை : ஓர் ஆயரின் பணி முதல் பணி, செபம்


மார்ச்,20,2018. தொழில், அரசியல் மற்றும் உலகப்போக்கு சார்ந்த வேறு காரியங்களில் கவனம் செலுத்தாமல், மனிதரின் நன்மைக்காக, இறைவனுக்குரிய காரியங்களில் கருத்தாய் இருப்பதே, ஓர் ஆயரின் பணியாகும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆயர்கள் திருநிலைப்பாட்டு திருப்பலியில் மறையுரையாற்றினார்.

வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், இத்திங்கள் மாலை 5 மணிக்கு நிறைவேற்றிய திருப்பலியில், அருள்பணியாளர்கள் Waldemar Stanisław Sommertag, Alfred Xuereb, José Avelino Bettencourt ஆகிய மூவரையும், ஆயர்களாகத் திருநிலைப்படுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ். அருள்பணியாளர்கள் Waldemar Stanisław Sommertag, Alfred Xuereb, José Avelino Bettencourt ஆகிய மூவரும், முறையே, நிக்கராகுவா, கொரியா மற்றும் மங்கோலியா, அர்மேனியா மற்றும் ஜார்ஜியா நாடுகளுக்குத் திருப்பீடத் தூதர்களாக, அண்மையில் திருத்தந்தையால் நியமிக்கப்பட்டவர்கள். இம்மூவரும், பேராயர்களாக, பணிகளை ஏற்கின்றனர்.

கத்தோலிக்கத் திருஅவையில் ஆயரின் பணிகள் மற்றும் வரலாறு பற்றி மறையுரையில் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஓர் ஆயரின் பணி முதல் பணி, செபம்

என்றும், செபம் செய்யாத ஆயரால் தனது கடமையை ஆற்ற முடியாது மற்றும், தனது அழைப்பை நிறைவேற்ற இயலாது என்றும் கூறினார்.

ஆயர் பணியில் ஒத்துழைப்பவர்கள் பற்றிக் கூறியத் திருத்தந்தை, ஆயர்கள், மறைமாவட்ட அருள்பணியாளர்களுடன் நெருக்கமாகவும்,  அருள்பணியாளர்கள், தங்கள் ஆயரை அதே நாளில், அல்லது அதற்கு அடுத்த நாளிலாவது சந்திக்கும் விதத்தில் ஆயர்கள் இருக்க வேண்டும் எனவும், மறையுரையில் கூறினார்.

ஆயரின் பணி வழியாக, கிறிஸ்து, நற்செய்தியை அறிவிப்பதற்கும், நம்பிக்கை கொண்டவர்களுக்கு அருளடையாளங்களை வழங்குவதற்கும் ஒருபோதும் தவறமாட்டார் எனவும் திருத்தந்தை உரையாற்றினார்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.