மார்ச்,22,2018. புலம்பெயர்ந்தோரை வரவேற்பதும், பாதுகாப்பதும் அனைத்துலக சமுதாயத்தின் பொதுவான பொறுப்பு என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், ஐ.நா. அவை கூட்டமொன்றில் உரையாற்றினார்.
ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. அவை கூட்டங்களில், திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்றுவரும் பேராயர் Ivan Jurkovič அவர்கள், 'புலம்பெயர்ந்தோரைக் குறித்து உலகளாவிய முடிவுகள்' என்ற தலைப்பில், ஐ.நா. புலம்பெயர்ந்தோர் அவையான UNHCR நடத்திய கூட்டத்தில், இப்புதனன்று உரையாற்றுகையில், இவ்வாறு கூறினார்.
புலம்பெயர்ந்தோரின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு, ஒரு சில வேளைகளில், குடிமக்கள் தியாகங்களை மேற்கொள்ளவேண்டியுள்ளது என்பதை, சிறப்பாகக் குறிப்பிட்டுப் பேசிய பேராயர் யுர்கோவிச் அவர்கள், ஒரு சில நாடுகளில், குடிமக்களின் எண்ணிக்கையைவிட, புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது, பெரும் சவால்களை உருவாக்குகின்றது என்று கூறினார்.
இத்தகைய சவால்களைச் சந்தித்து, தியாகங்கள் புரியும்போது, மனித சமுதாயத்தை மேம்படுத்துகிறோம் என்ற உணர்வே நம்மை வழிநடத்த வேண்டும் என்று பேராயர் யுர்கோவிச் அவர்கள், தன் உரையில் வேண்டுகோள் விடுத்தார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |