மார்ச்,24,2018. பெரு நாட்டில் அரசுத்தலைவர் பதவி விலகி, துணை அரசுத்தலைவர் தலைமைப்பதவியை ஏற்றுள்ளதைத் தொடர்ந்து, நாட்டில் நன்னெறி மதிப்பீடுகள் மீண்டும் உயிர்பெற்றெழ உதவவேண்டும் என்று விண்ணப்பித்துள்ளனர், அந்நாட்டு ஆயர்கள்.
அரசுத்தலைவர் Pedro Pablo Kuczynski அவர்கள், ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக, பதவி விலகியதைத் தொடர்ந்து உருவான பதட்ட நிலைகள் குறித்து அண்மையில் கூடி விவாதித்த பெரு நாட்டு ஆயர்கள், உயர் மட்டத்தில் இடம்பெறும் ஊழல், மக்களின் நம்பிக்கையை, குறிப்பாக, ஏழைகள் மற்றும் இளையோரின் எதிர்காலக் கனவுகளைப் பறிப்பதாக உள்ளது என்று கூறியுள்ளனர்.
தற்போது நாட்டில் நடந்துகொண்டிருப்பவை குறித்த உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டியது மட்டுமல்ல, மக்களின் பொதுநலனுக்கு முதலிடம் கொடுக்கப்பட வேண்டியதும் அவசியம் என்பதை ஆயர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தண்டிக்கப்படுவோம் என்ற அச்சம் அறவே இன்றி, தனியார் மற்றும் குழுக்களின் பேராசையால் வேரூன்றிவிடும் ஊழல், நன்னெறியிலிருந்து விலகிச் செல்லும் அரசியலின் போக்காக உள்ளது என்பதையும், ஆயர்கள் தங்கள் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
சமூக வலைத்தளங்கள்: