2018-03-26 16:53:00

அன்னை மரியின் எடுத்துக்காட்டும் பரிந்துரைகளும் துணை வருவதாக


மார்ச்,26,2018. இவ்வாண்டு அக்டோபர் மாதம் இடம்பெற உள்ள உலக ஆயர்கள் மாமன்றம், மற்றும் வரும் ஆண்டு பானமா நாட்டில் இடம்பெற உள்ள உலக இளையோர் நாள் கொண்டாட்டங்களுக்கு தயாரிப்பாக, மறைமாவட்ட அளவில், குருத்து ஞாயிறன்று சிறபிக்கப்பட்ட இளையோர் நாள் கொண்டாட்டங்கள் குறித்து, தன் ஞாயிறு மூவேளை செப உரையில் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இளையோரை மையப்படுத்தி, நடைபெறவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றத்திற்கு தயாரிப்பாக, உலக இளையோர் பிரதிநிதிகளுடன் கடந்த வாரம் உரோம் நகரில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டோருக்கு தன் நன்றியை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆயர்கள் மாமன்றத்தின் பொதுச் செயலர் கர்தினால் லொரன்சோ பால்திசேரி அவர்களுக்கு தனிப்பட்ட விதத்தில் நன்றியை வெளியிட்டார்.

இளையோர் குறித்த மாமன்ற கூட்டத்திற்கும், உலக இளையோர் நாள் கொண்டாட்டங்களுக்கும் தயாரிக்கும் நம் பாதையில், அன்னை மரியின் எடுத்துக்காட்டும் பரிந்துரைகளும் நம்மோடு என்றும் துணை வருவதாக எனவும் உரைத்த திருத்தந்தை, உயிர்ப்பை நோக்கிய நம் சிலுவைப் பாதையில் அன்னைமரியின் உள்மன அமைதியையும், இதயத்தின் பார்வையையும், அன்புடன் கூடிய விசுவாசத்தையும் கற்றுக்கொள்வோம் எனவும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.