2018-03-27 16:12:00

கல்வி வரியின் பலன் அனைவரையும் சென்றடைய கர்தினால் விண்ணப்பம்


மார்ச்,27, 2018. லெபனான் நாட்டில் அரசுப் பள்ளிகளில் செய்யப்பட்டுள்ள சம்பள மறுசீரமைப்பின் காரணமாக, தனியார் பள்ளிகள் மூடப்படவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு கர்தினால் Béchara Boutros Raï  அவர்கள் கவலையை வெளியிட்டுள்ளார்.

புறநகர்ப்பகுதிகளிலும், கிராமங்களிலும் ஏழைகளிடையே பணியாற்றும் தனியார் பள்ளிகள், ஏற்கனவே ஆசிரியர்களுக்கு போதிய ஊதியம் கொடுக்க முடியாமல் திணறும் வேளையில், அரசுப்பள்ளிகளில் ஊதியம் அதிகரிக்கப்பட்டுள்ளதும், தனியார் பள்ளிகளுக்கு அரசு உதவிகள் வழங்கப்படாமையும், தனியார் பள்ளிகளை, மூடும் நிலைக்குத் தள்ளியுள்ளதாக கூறினார் மாரனைட் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை பூத்ரோஸ் இராய்.

தனியார் பள்ளிகளும் மக்களுக்கு கல்விப்பணி புரிகின்றன என்ற நிலையில், அவற்றின் ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க அரசு உதவ‌வில்லையெனில், ஏழைக்குடும்பங்களின் கல்வியே பாதிக்கப்படும் என்ற கவலையையும் வெளியிட்ட கர்தினால் பூத்ரோஸ் இராய் அவர்கள், பள்ளியின் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டுமெனில், பணக்காரர்களின் குழந்தைகளுக்கு மட்டுமே கல்வி வழங்கும் நிலைக்கு தனியார் பள்ளிகளை தள்ளுவதாக அரசின் நிலை உள்ளது என எடுத்துரைத்தார்.

ஆசிரியர்களின் ஊதிய உயர்வையொட்டி, மக்களிடையே வரிச்சுமை அதிகரித்துள்ள வேளையில், அந்த வரியை, அரசுப்பள்ளிகளுக்கு மட்டும் பயன்படுத்துவது நியாயமற்றது என, மேலும் கூறினார், கர்தினால் பூத்ரோஸ் இராய்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.