2018-03-28 15:42:00

துன்ப, துயரங்களும், மகிழ்வும், மனித வாழ்வின் அம்சங்கள்


மார்ச்,28,2018. துன்ப, துயரங்களும், மகிழ்வும், மனித வாழ்வுப் பயணத்தின் இணைபிரியா அம்சங்கள் என்று இந்தியாவின், போபால் உயர் மறைமாவட்ட பேராயர், லியோ கொர்னேலியோ அவர்கள் கூறினார்.

குருத்தோலை ஞாயிறன்று தான் வழங்கிய மறையுரையைக் குறித்து, வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romanoவுக்கு அளித்த பேட்டியில், பேராயர் கொர்னேலியோ அவர்கள் இவ்வாறு கூறினார்.

பாடுகளின் வாரத்தைத் துவங்கியிருக்கும் வேளையில், மத்தியப்பிரதேசத்தில், Satna, Ratlam, Vidisha ஆகிய ஊர்களில் வாழும் கிறிஸ்தவர்கள், அண்மைய மாதங்களில் அடைந்த பல்வேறு தாக்குதல்களைக் குறித்தும், அண்மையில் Ujjain நகரில் கத்தோலிக்க மருத்துவமனை தாக்கப்பட்டது குறித்தும் தன் மறையுரையில் குறிப்பிட்டார், பேராயர் கொர்னேலியோ.

'ஓசன்னா' என்று கூறிய மக்களே, 'சிலுவையில் அறையும்' என்றும் குரலெழுப்பியதுபோல, இந்தியாவில் கத்தோலிக்க சமுதாயம் ஆற்றும் பணிகளைப் பாராட்டுவோரும் உண்டு, அவற்றைப் பழித்து, தாக்குதல்களை மேற்கொள்வோரும் உண்டு என்று பேராயர் கொர்னேலியோ அவர்கள் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.