2018-04-03 16:01:00

அரசியல் கைதிகளின் விடுதலைக்கு ஆயரின் ஆதரவுக் கையெழுத்து


ஏப்.03,2018. இலங்கையில் சிறைவைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்ற மக்களின் வேண்டுகோளுக்கு தன் முழு ஆதரவையும் வழங்கியுள்ளார், அந்நாட்டு ஆயர், ஜோசப் பொன்னையா.

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் சிறைவைக்கப்பட்டுள்ள சச்சிதானந்தம் அனந்தசுதாகரன் என்ற தமிழ் அரசியல் கைதியின் விடுதலைக்காக, தாயை இழந்த அவரின் இரு குழந்தைகளும் நடத்திவரும் அறப் போராட்டத்திற்கும் தன் ஆதரவை வெளியிட்டுள்ள ஆயர் பொன்னையா அவர்கள், அரசியல் கைதிகளின் விடுதலைக்கென, இலங்கை அரசுத்தலைவர் மைத்ரிபால சிறிசேனா அவர்களுக்கு விண்ணப்பம் ஒன்றையும் விடுத்துள்ளார்.

1983 முதல் 2009ம் ஆண்டுவரை இடம்பெற்ற இலங்கை உள்நாட்டுப் போரின்போது வெடிகுண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு, தன் 26ம் வயதில் கைதுச்செய்யப்பட்டார், அனந்தசுதாகரன்.

மார்ச் மாதம் 15ம் தேதி அவரது மனைவி உயிரிழந்தபோது, இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள மூன்று மணி நேர அனுமதியே காவல் துறையால் அவருக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.