2018-04-05 15:16:00

ஃபேஸ்புக் - 87 மில்லியன் பயன்பாட்டாளர்களின் தகவல்கள்


ஏப்.05,2018. கேம்பிரிட்ஜ் அனலிடிகா (Cambridge Analytica) என்னும் அரசியல் ஆலோசனை நிறுவனத்தால், 87 மில்லியன் ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களின் தகவல்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் ஒப்பு கொண்டுள்ளது.

இது, முன்னதாக வெளியிடப்பட்ட எண்ணிக்கையை காட்டிலும் அதிகமாகும். அதிர்ச்சி தரும் இத்தகவலை முதலில் வெளிப்படுத்திய கிறிஸ்டோஃபர் வைலி (Christopher Wylie) அவர்கள், 50 மில்லியன் பயன்பாட்டாளர்களின் தகவல்கள் கசிந்துள்ளதாக தெரிவித்தார்.

தகவல்களை வழங்கும் தளத்தை ஃபேஸ்புக் வழங்குகிறது அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பது அவரவர் பொறுப்பு என முன்னர் கருதியதாக செய்தியாளர்களிடம் தெரிவித்த ஃபேஸ்புக் நிறுவனத்தின் உரிமையாளர், மார்க் சக்கர்பர்க் (Mark Zuckerberg) அவர்கள், அத்தகைய குறுகிய எண்ணம், தவறான ஒன்று என்று தற்போது தெரிவித்துள்ளார்.

தகவல்களை வழங்கும் தளங்களை உருவாக்குவது மட்டும் தங்கள் பொறுப்பல்ல அதை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதை கண்காணிப்பதும் தங்கள் பொறுப்பு என சக்கர்பர்க் அவர்கள் தெரிவித்துள்ளார்.

கேம்பிரிட்ஜ் அனலிடிகா என்னும் நிறுவனம் தங்கள் அரசியல் வாடிக்கையாளர்களுக்காக ஃபேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

"நம்பிக்கை மீறல் நடைபெற்றுள்ளது" என தனது முகநூல் பதவில் தெரிவித்திருந்த சக்கர்பர்க் அவர்கள், ஃபேஸ்புக்கை தொடங்கியது தான் என்பதால், அதில் என்ன நடந்தாலும் தானே பொறுப்பு என்றும், தொடரும் பல சர்ச்சைகளுக்கு மத்தியில், ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு தலைமை தாங்குவதற்கு தான் சிறந்த நபர் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆதாரம் : பிபிசி / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.