2018-04-05 15:03:00

வத்திக்கானில் புனித கிரகோரி சிலை – திருத்தந்தை திறப்பு


ஏப்.05,2018. அர்மேனிய மக்களின் விசுவாசத்திற்கு அடித்தளமிட்ட நரேக் நகர் புனித கிரகோரியின் உருவச்சிலை வத்திக்கானில் நிறுவப்படுவது தான் விரும்பும் ஓர் எண்ணம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2016ம் ஆண்டு, அந்நாட்டிற்கு சென்ற வேளையில் கூறினார்.

திருத்தந்தையின் இவ்விருப்பம் நிறைவேறும் வகையில், வத்திக்கான் பாப்பிறை தோட்டத்தில் நிறுவப்பட்டிருந்த புனித கிரகோரியின் வெண்கல உருவச்சிலையை, ஏப்ரல் 5, இவ்வியாழன் மதியம் 12 மணியளவில், திருத்தந்தை அவர்கள் திறந்து வைத்தார்.

கீழை நாட்டு கலாச்சாரத்தில் ஊன்றியுள்ள அர்மேனியாவிற்கும், மேற்கித்திய கலாச்சாரத்தில் ஊன்றியுள்ள ஐரோப்பாவிற்கும் ஒரு பாலமாக நரேக் நகர் புனித கிரகோரி விளங்குவதால், அவரது உருவச்சிலை வத்திக்கானில் நிறுவப்படுவது பொருளுள்ள நிகழ்வு என்று, திருப்பீடத்தின் அர்மேனிய தூதர் Mikayel Minasyan அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

10வது நூற்றாண்டில் வாழ்ந்த நரேக் நகர் புனித கிரகோரியை, திருஅவையின் மறைவல்லுனர்களில் ஒருவர் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருத்தூதர்களான பார்த்தலோமேயு மற்றும் ததேயு ஆகியோரால் கிறிஸ்துவுக்கு அறிமுகமான அர்மேனிய நாடு, தன்னையே ஒரு கிறிஸ்தவ நாடென்று அறிவித்த மிகப் பழம்பெரும் நாடாக விளங்குகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.