2018-04-07 15:09:00

இளையோரே, இயேசுவின் இறையாட்சி கனவை நனவாக்கத் தயாரா?


ஏப்.07,2018. நம் மத்தியில் இருக்கும் இறைவனையும், சகோதரர், சகோதரிகளையும் அன்புகூர அழைக்கும், இயேசுவின் இறையாட்சி கனவை நனவாக்குங்கள் என்று, இத்தாலிய இளையோரிடம் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்தாலியின் பிரேஷா மறைமாவட்டத்தின், ஏறத்தாழ மூவாயிரம் இளையோரை, இச்சனிக்கிழமை நண்பகலில், அருளாளர் திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வீட்டுப்பாடம் ஒன்றையும் இளையோருக்கு அளித்தார்.

ஜொவான்னி பத்திஸ்தா மொந்தினி என்ற இயற்பெயரைக் கொண்ட, அருளாளர் திருத்தந்தை ஆறாம் பவுல் பிறந்த பிரேஷா மறைமாவட்டத்தின் இளையோரிடம், அத்திருத்தந்தையின் இளமைக்கால வாழ்வு மற்றும் அவரின் கனவுகள் பற்றிச் சிந்திக்கும் வீட்டுப்பாடத்தை அளித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருஅவை மாறுவதற்கு இளையோர் உதவ முடியும் என, ஆயர்கள் உண்மையிலே நம்புகின்றனரா என, ஓர் இளையவர் கேள்வி எழுப்பினார், ஆயர்கள் இளையோருக்குச் செவிமடுத்து திருஅவையில் ஏதாவது மாற்றத்தைக் கொண்டுவர விருப்பமாய் இருந்தால், இளையோராகிய நீங்கள், இயேசுவுக்குச் செவிமடுத்து, உங்களை மாற்றுவதற்குத் தயாரா என்று, இப்போது நான் கேட்கிறேன் எனக் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசுவை நம்புகின்றவர்களுக்கு வியத்தகு அனுபவங்களை அவர் கொடுக்கின்றார் எனவும், விவிலியத்தை வாசிக்கவும், திருப்பலியில் பங்கு பெறவும் இளையோருக்கு அழைப்பு விடுத்த திருத்தந்தை, இளம் வயதில் ஏராளமான கனவுகளுடன் வாழ்ந்த புனித பிரான்சிஸ் அசிசி, புனித தமியான் போன்றவர்கள் வாழ்வு பற்றியும் எடுத்துரைத்தார்.

வருகின்ற அக்டோபரில் இளையோர் பற்றி நடைபெறவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றம் பற்றியும் கூறியத் திருத்தந்தை, தனக்காகச் செபிக்க மறக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.