2018-04-09 16:40:00

மன்னிப்பதில் சோர்வுறாத இறைவனுக்கு கதவுகளை திறந்து வையுங்கள்


ஏப்.09,2018. மன்னிப்பதில் சோர்வுறாத இறைவனின் இரக்கத்தை நாம் அடைய வேண்டுமெனில், அவருக்காக நம் கதவுகள் எப்போதும் திறந்தேயிருக்கவேண்டும் என, இறை இரக்கத்தின் இஞ்ஞாயிறையொட்டி உரோம் நகர் புனித பேதுரு வளாகத்தில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

நம் பாவங்களுக்காக மனம் வருந்தி வெட்கமுறுவது நல்லது, ஆனால், நாம் எது குறித்தும் அவமான உணர்வைக் கொள்ளாமல்  இருப்பது பெரும் துன்பம், என தன் மறையுரையில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவைக் கண்டதால் விசுவாசம் கொண்ட புனித தோமாவைப் பற்றி கூறும் இஞ்ஞாயிறு வாசகத்தை சுட்டிக்காட்டி, நாமும் இயேசுவின் காயங்கள் வழியாக அவரைக் கண்டுகொள்ளவேண்டும் என்றார்.

தன்னை மறுதலித்தவரையும், தன்னை விட்டுவிட்டு ஓடியவர்களையும் இயேசு மன்னித்ததைக் காணும் நாம், மன்னிப்பின் முக்கியத்துவத்தை உணர்வோம் என்ற அழைப்பையும் முன் வைத்தார் திருத்தந்தை.

கிறிஸ்தவர்கள் என்பது குறித்து நாம் பெருமைப்பட்டு, நம் விசுவாசத்தின் உன்னத மதிப்பீடுகள் குறித்து எடுத்துரைத்தாலும், அவரின் சீடர்கள் போன்று, இயேசுவைக் கண்டு, அவரின் அன்பைத் தொடும்போதுதான், அமைதியையும் மகிழ்வையும் கண்டுகொள்வோம்' எனவும் கூறினார் திருத்தந்தை.

இயேசுவின் அன்பை நாம் கண்டுகொள்ளவேண்டுமெனில் முதலில் நம் பாவங்கள் மன்னிக்கப்பட, நம்மையே நாம் திறந்தவர்களாக செயல்படவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் பாவங்கள் குறித்து நாம் வெட்கப்படுவதே முதல் படியாகும், ஆனால் இன்றைய உலகில் எது குறித்தும் வெட்கப்படாத ஒரு நிலையே பெரும் தீமையாக உள்ளது என மேலும் கூறினார்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.