2018-04-11 14:53:00

திருத்தந்தை மேற்கொள்ளவிருக்கும் மேய்ப்புப்பணி பயணங்கள்


ஏப்.11,2018. ஏப்ரல் 15, வருகிற ஞாயிறு, உரோம் நகரின் மேற்கே அமைந்துள்ள கோர்வியாலே (Corviale) பகுதியில், திருச்சிலுவையின் புனித பவுல் பங்கிற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேய்ப்புப்பணி பயணமாகச் செல்கிறார்.

ஞாயிறு மாலை 4 மணியளவில் இப்பங்கு ஆலயத்தைச் சென்றடையும் திருத்தந்தை, மறைக்கல்வி பயிலும் குழந்தைகள், வயது முதிர்ந்தோர், நோயுற்றோர், வறியோர் ஆகியோரை தனித்தனிக் குழுக்களாகச் சந்திக்கிறார்.

பங்கு ஆலயத்தில் ஒரு சிலருக்கு ஒப்புரவு அருளடையாளம் வழங்கும் திருத்தந்தை, மாலை 6 மணியளவில், திருப்பலியை தலைமையேற்று நடத்துகிறார் என்று உரோம் உயர் மறைமாவட்டம் அறிவித்துள்ளது.

மேலும், ஏப்ரல் 20, வெள்ளியன்று, அலெஸ்ஸானோ (Alessano) மற்றும் மோல்ஃபெட்டா (Molfetta) ஆகிய பகுதிகளில் திருத்தந்தையின் மேய்ப்புப்பணி சந்திப்புக்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, Neocatechumenal Way என்றழைக்கப்படும் அமைப்பினர், மே மாதம் 5ம் தேதி, சனிக்கிழமை, தங்கள் 50ம் ஆண்டு நிறைவைச் சிறப்பிப்பதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வமைப்பினரை, Tor Vergata என்ற இடத்தில் சந்திக்கவுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.