2018-04-23 15:46:00

நிகராகுவா நாட்டின் அமைதிக்காக விண்ணப்பித்த திருத்தந்தை


ஏப்.23,2018. நிகராகுவா நாட்டில் துன்புறும் மக்களுடன் தான் செபத்தில் ஒன்றித்திருப்பதாகவும், அந்நாட்டில் நிகழ்ந்துவரும் வன்முறைகள் முடிவுக்கு வரவேண்டுமென்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இஞ்ஞாயிறு வழங்கிய அல்லேலூயா வாழ்த்தொலி உரையின் இறுதியில் கூறினார்.

நிகராகுவா நாட்டில் அரசுக்கு எதிராக நிகழ்ந்துவரும் போராட்டங்களில் இதுவரை குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பதைக் கவலையுடன் குறிப்பிட்டுப் பேசியத் திருத்தந்தை, அமைதி வேண்டி, அந்நாட்டு ஆயர்கள் விடுத்துள்ள விண்ணப்பத்தில் தானும் இணைவதாகக் கூறினார்.

மேலும், இஞ்ஞாயிறு காலையில் புனித பேதுரு பசிலிக்காவில் 16 தியாக்கோன்கள் அருள்பணியாளர்களாக அருள் பொழிவு பெற்றனர் என்று குறிப்பிட்ட திருத்தந்தை, அந்த 16 பேரில் நால்வர், தன்னுடன் சேர்ந்து மக்களுக்கு ஆசீர் வழங்க வந்துள்ளனர் என்று கூறினார்.

இதையடுத்து, புதிதாக அருள்பொழிவு பெற்ற நான்கு அருள்பணியாளர்கள், திருத்தந்தை உரை வழங்கிய சன்னலில் அவருடன் தோன்றி, அவர் இறுதி ஆசீர் வழங்கிய வேளையில், அவர்களும் இணைந்து ஆசீர் வழங்கினர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.