ஏப்.28,2018. மியான்மாரின் வடக்குப் பகுதியில், இராணுவம் மற்றும் கச்சின் இன புரட்சியாளர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள புதிய மோதல்களில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர் என்று, இச்சனிக்கிழமையன்று வெளியான செய்திகள் கூறுகின்றன.
கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து, ஏறக்குறைய நான்காயிரம் பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
கச்சின் சுதந்திர அமைப்பு மற்றும் மியான்மார் அரசு படைகளுக்கு இடையே இருந்து வந்த நீண்ட கால மோதல்கள் தற்போது அதிகரித்துள்ளன என்றும், புரட்சியாளர்கள் மீது வான்வழி மற்றும் பீரங்கி படை தாக்குதல்களை இராணுவம் நடத்தி வருகின்றது என்றும் கூறப்படுகிறது.
ஆயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்து வரும் நிலையில், சீன எல்லையின் அருகே, மோதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கி இருக்கும் மக்கள், அப்பகுதிகளுக்குச் செல்ல அனுமதிக்குமாறு, உதவி நிறுவனங்கள் அரசை வலியுறுத்தி வருகின்றன.
ஆதாரம் : பிபிசி / வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |