2018-04-28 16:38:00

கடவுள் செபங்களுக்குப் பதிலளித்துள்ளார், கொரிய ஆயர்கள்


ஏப்.28,2018. ஏப்ரல் 27, இவ்வெள்ளிக்கிழமையன்று, இரு கொரிய அரசுத்தலைவர்களும் சந்தித்து, அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பது, கடவுள் தங்களுக்குப் பொழிந்துள்ள ஆசீராகும் என்று, கொரிய கத்தோலிக்க ஆயர்கள் கூறியுள்ளனர்.

வட கொரிய கம்யூனிச அரசுத் தலைவர் கிம் ஜாங் உன், தென் கொரிய அரசுத்தலைவர் மூன் ஜே-இன் ஆகிய இருவரும், இவ்விரு நாடுகளின் எல்லையில் அமைந்துள்ள பான்முன்ஜியோம் கிராமத்தில் நடத்திய வரலாற்று முக்கியத்துவம் மிக்க சந்திப்பில் அமைதி ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டனர். அதன்படி, கொரிய தீபகற்பத்தில் இனிமேல் போர் இடம்பெறாது மற்றும், கொரிய தீபகற்பம் முழுவதும் அணு ஆயுதமற்ற பகுதியாக அமையும். மேலும், 1953ம் ஆண்டில் நிறைவடைந்த மூன்றாண்டு கொரியச் சண்டைக்குப்பின் பிளவுபட்டிருந்த இவ்விரு நாடுகளின் தலைவர்கள் கையெழுத்திட்ட பான்முன்ஜியோம் ஒப்பந்தத்தின் வழியாக, கொரிய தீபகற்பத்தில் அமைதியின் புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது என்று செய்திகள் கூறுகின்றன.

இத்தலைவர்களின் சந்திப்பு குறித்து, பீதேஸ் செய்தியிடம் பேசிய தென் கொரிய ஆயர் Lazzaro You Heung-sik அவர்கள், கொரியாவில் புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது குறித்து உண்மையிலேயே மகிழ்வதாகவும், கடவுள் வியத்தகு அதிசயங்களை ஆற்றுகின்றார் என்ற உணர்வு ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

ஆதாரம் : Fides /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.