2018-04-30 15:05:00

இணையதள உலகில் ஆர்வக் கோளாறுகள் குறித்து எச்சரிக்கை


ஏப்.30,2018. உண்மை போன்று தோற்றமளிக்கின்ற கற்பனை உலகால் கவரப்படும் இளையோர், இந்த ஆர்வக் கோளாறால் சிறைவைக்கப்படாமல் இருக்க உதவ வேண்டியது பெரியோரின் கடமை என்று, இத்திங்கள் காலை மறையுரையில் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இணையதளம் வழியாக காட்டப்படும் கற்பனை உலகம் என்பது, பல தீயவிடயங்களைக் கொண்டுள்ளது என்று, தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இத்திங்கள் காலை நிறைவேற்றிய திருப்பலியில் மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நன்மைகளிலிருந்து தீயவைகளைப் பகுத்தறிய தூய ஆவியாரின் துணையை நாட வேண்டியது அவசியம் என்று கூறினார்.

வாழ்வு என்பது, முற்றிலும் ஆர்வநிலைகளை உள்ளடக்கியது, இதில் குழந்தைகளின் ஆர்வம் என்பது, தெரியாததைத் தெரிந்துகொள்ள முனையும் ஆர்வமாகும், இந்த ஆர்வம், நன்மை பயக்கக்கூடியது, ஏனெனில் இது வளர்ச்சியைக் குறிப்பதாகும் என்று கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மற்றவர்களின் விடயங்களை அனுமதியின்றி அறிந்துகொண்டு, அது குறித்து உரையாடுவது போன்றவை, தவறான ஆர்வங்கள் என்பதைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றையச் சிறார், இணையதளம் வழங்கும் உலகில் நுழைந்து தவறானவை குறித்து ஆர்வமுள்ளவர்களாகும் ஆபத்து இருப்பதையும் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.