2018-04-30 15:58:00

பிலிப்பீன்சில் அருள்பணியாளர் ஒருவர் சுட்டுக்கொலை


ஏப்.30,2018. சுரங்கத் தொழிலுக்கு எதிராகவும், பூர்வீகக் குடிமக்களுக்கு ஆதரவாகவும் பிலிப்பீன்சில் பணியாற்றிவந்த இளம் அருள்பணியாளர் ஒருவர், இஞ்ஞாயிறன்று, அடையாளம் தெரியாத மனிதர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

அருள்பணி Mark Anthony Yuaga Ventura அவர்கள், ஞாயிறு திருப்பலியை நிறைவேற்றிய பின்னர், குழந்தைகளை ஆசிர்வதித்துக் கொண்டிருந்தபோது, தலைக்கவசம் அணிந்து இருசக்கர மோட்டார் வாகனத்தில் வந்த மனிதர் ஒருவர், அவரை நோக்கி இருமுறை சுட்டுக் கொன்றுள்ளார்.

37 வயதான இந்த அருள்பணியாளர், பூர்வீகக் குடிமக்களின் உரிமைகளுக்காக, தொடர்ந்து அம்மக்களுடன் இணைந்து போராடி வந்தவர்.

இக்கொலை குறித்து தங்கள் வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ள பிலிப்பீன்ஸ் ஆயர்கள், இக்கொலையில் தொடர்புடையவர்களை உடனடியாக நீதியின்முன் கொண்டுவர, அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என விண்ணப்பித்துள்ளனர்.

பிலிப்பீன்சில், ஏற்கனவே 2017ம் ஆண்டு, டிசம்பரில், 72 வயது நிரம்பிய அருள்பணி Marcelito Paez அவர்கள், அடையாளம் தெரியாத மனிதர்களால் கொலைசெய்யப்பட்டுள்ளார்.

ஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.