2018-05-05 14:52:00

பாஸ்கா காலம் 6ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


ஆல்ப்ஸ் மலைப்பகுதியில், ஒரு கிராமத்தில், அழகான சிற்றாலயம் ஒன்று அமைந்திருந்தது. அவ்வாலயம், ஏன் அவ்விடத்தில் கட்டப்பட்டது என்பதைக் கூறும் கதை, ஆலயத்தைவிட அழகானது.

அந்த கிராமத்தில் இரு சகோதரர்கள் வாழ்ந்தனர். அவ்விரு சகோதரர்களும் தங்கள் பாரம்பரிய நிலத்தில் ஒன்றாக உழைத்து வந்தனர். நிலத்தில் விளைந்த தானியங்களை இருவரும் சமமாகப் பகிர்ந்துகொண்டனர். அவர்களில் ஒருவருக்கு திருமணம் ஆகி குடும்பத்தோடு வாழ்ந்தார். மற்றொருவர், பிரம்மச்சாரி.

பிரம்மச்சாரியாக வாழ்ந்தவர், ஒருநாள் தனக்குள், "நான் தனி ஆள். என் அண்ணனுக்கோ குடும்பம் உள்ளது. எனவே, தானியங்களைச் சமமாகப் பகிர்வது நியாயமல்ல" என்று சிந்தித்தார். இரவானதும், அவர், தன்னிடமிருந்த தானிய மூட்டைகளில் ஒன்றை எடுத்து, அதை அண்ணன் வைத்திருந்த தானிய மூட்டைகளோடு வைத்துவிட்டுத் திரும்பினார்.

அண்ணனும், அதேவண்ணம் சிந்தித்தார். "எனக்காவது ஆதரவு காட்ட குடும்பம் உள்ளது. தம்பிக்கு யாருமே இல்லை. எனவே, தானியங்களைச் சமமாகப் பகிர்வது நியாயமல்ல" என்று எண்ணிய அண்ணன், இரவோடிரவாக, ஒரு மூட்டையை எடுத்து, தம்பி வைத்திருந்த மூட்டைகளோடு வைத்துவிட்டுத் திரும்பினார்.

மாதங்கள் உருண்டோடின. அண்ணன், தம்பி இருவருக்கும், எப்படி தங்கள் தானிய மூட்டைகள் குறையாமல் உள்ளன என்பது, புதிராகவே இருந்தது. ஒருநாள் இரவு, இரண்டுபேரும், மூட்டைகளைச் சுமந்த வண்ணம், ஒருவரையொருவர் சந்திக்க நேர்ந்தது. உண்மையை உணர்ந்த இருவரும், ஆனந்த கண்ணீரோடு, தழுவிக்கொண்டனர்.

அப்போது, திடீரென, வானிலிருந்து குரல் ஒன்று கேட்டது: "இதோ, இங்கு என் ஆலயத்தை எழுப்புவேன். மக்கள் உள்ளார்ந்த அன்புடன், எங்கு சந்திக்கின்றனரோ, அங்கு, என் பிரசன்னம் என்றும் தங்கும்" என்று ஒலித்த குரல், அவ்விடத்தில் கோவில் கட்டப்படுவதற்குக் காரணமாக அமைந்தது என்ற பாரம்பரியக் கதை, அக்கிராமத்தில் சொல்லப்படுகிறது.

தன்னை மையப்படுத்தாமல், அடுத்தவரை மையப்படுத்தி எழும் உன்னத உணர்வே, உண்மையான அன்பு. அந்த அன்பை பறைசாற்றும் இதயங்களெல்லாம், ஆண்டவன் விரும்பி வாழும் ஆலயங்கள்தாமே!

ஒருவர் மீது ஒருவர் காட்டும் அன்பு ஒன்றே, இயேசுவின் சீடர்களுக்கு அடையாளமாக அமையவேண்டும் என்ற முக்கியப் பாடத்தை, இன்றைய இரண்டாம் வாசகமும், நற்செய்தியும் வலியுறுத்திக் கூறுகின்றன. யோவான் எழுதிய முதல் திருமுகத்தின் 4ம் பிரிவிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில், கடவுளின் அரியதோர் இலக்கணம் கூறப்பட்டுள்ளது. அதுதான், "கடவுள் அன்பாய் இருக்கிறார்" (1 யோவான் 4:8) என்ற சொற்கள். "God is Love" அதாவது, "கடவுள் அன்பாய் இருக்கிறார்" என்ற மூன்று சொற்கள், கிறிஸ்தவ மறையின் இதயத்துடிப்பாக அமைந்துள்ளன. இன்னும் சொல்லப்போனால், இந்த உண்மை ஒன்றே, அனைத்து உண்மையான மதங்களின் உயிர்த்துடிப்பு.

இந்த இலக்கணத்தை பொன்னெழுத்துக்களால் எழுதி, அவற்றில் வைரக்கற்களைப் பதித்து, ஓர் உருவமாக்கி, அதற்கு ஒரு கோவில் எழுப்பி, நாம் வழிபட முடியும். அவ்வாறு செய்தால், "கடவுள் அன்பாய் இருக்கிறார்" என்ற இலக்கணத்தின் உண்மைப் பொருளை நாம் கொன்றுவிடுவோம். "கடவுள் அன்பாய் இருக்கிறார்" என்று கூறும் யோவான், அந்த அன்பு, வானத்தில் இருந்தபடியே, நம் வழிபாட்டை எதிர்பார்க்கவில்லை, மாறாக, அந்த அன்பை செயல்வடிவில் வெளிப்படுத்த, தன் மகனை இவ்வுலகிற்கு இறைவன் அனுப்பினார் என்று தெளிவுபடுத்துகிறார். இத்தகைய அன்பை உணர்ந்தவர்கள் என்ன செய்யவேண்டும் என்பதை, யோவானின் திருமுகம் இவ்வாறு கூறியுள்ளது: அன்பார்ந்தவர்களே, கடவுள் இவ்வாறு நம்மீது அன்பு கொண்டார் என்றால், நாமும் ஒருவர் மற்றவர்மீது அன்பு கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம். (1 யோவான் 4:11)

"கடவுள் நம்மீது அன்பு கொண்டார் என்றால், நாமும் கடவுள் மீது அன்புகொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம்" என்று யோவான் கூறியிருந்தால், அது, பொருளுள்ள வாக்கியமாகத் தெரிந்திருக்கும். ஆனால், யோவான் கூறியுள்ள சொற்கள் புதிராக உள்ளன. கடவுள் நம்மீது கொள்ளும் அன்புக்கு நாம் அளிக்கக்கூடிய பதிலிறுப்பு, நாம் மற்றவர்கள் மீது கொள்ளும் அன்பு என்று யோவான் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். இந்தக் கண்ணோட்டத்தில் அவர் சிந்திப்பதற்குக் காரணம், இயேசு, இதே எண்ணங்களை இறுதி இரவுணவின்போது சீடர்களுக்குக் கூறியிருந்தார். அந்தப் பகுதி, இன்று, நற்செய்தியாக நம்மை அடைந்துள்ளது.

இந்த இறுதி இரவுணவின்போது, இயேசு, தன் சீடர்களின் காலடிகளைக் கழுவியபின்னர், புதிய கட்டளையொன்றை அவர்களுக்கு வழங்கினார்: "‘ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்’ என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள். நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்" என்றார். (யோவான் 13:34-35)

இயேசு வழங்கிய இந்தப் புதியக் கட்டளை, நாம் வழக்கமாகச் சிந்திக்கும் பாணியிலிருந்து வேறுபடுவதை உணர்கிறோம். "நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் என்னிடம் அன்பு செலுத்துங்கள்" என்று இயேசு கூறியிருந்தால், அதை நாம் எளிதில் புரிந்துகொள்வோம். ஆனால், கிறிஸ்தவ அன்பின் நோக்கம் என்ன என்பதை இயேசு தெளிவாக்குகிறார். "நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்" என்பதை, தன் புதிய கட்டளையாகத் தருகிறார்.

இன்றைய நற்செய்தியில், அந்தக் கட்டளையை இன்னும் சிறிது விளக்கிக் கூறுகிறார். இயேசு கூறும் சொற்களைக் கேட்கும்போது, அவை, புரட்சிகரமான அன்பைப் பற்றி கூறுகின்றன என்பதைப் புரிந்துகொள்கிறோம். "என் தந்தை என் மீது அன்பு கொண்டுள்ளது போல, நானும் என் தந்தை மீது அன்புகொண்டுள்ளேன்" என்றும், "நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பதுபோல நீங்களும் என் மீது அன்பு கொண்டிருக்க வேண்டும்" என்றும் இயேசு சொல்லியிருந்தால், அவற்றை யாரும் எளிதில் புரிந்துகொள்ளவும், ஏற்றுக்கொள்ளவும் முடியும். ஆனால், இங்கு இயேசு, “என் தந்தை என் மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளேன்” (யோ. 15:9) என்று கூறியபின், மீண்டும் ஒருமுறை தான் வழங்கிய புதிய கட்டளையை சீடர்களுக்கு நினைவுறுத்துகிறார். "நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பதுபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்புகொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை" (யோ. 15:12) என்று கூறுகிறார். அன்பு என்றால், 'உனக்கு நான், எனக்கு நீ' அல்லது, ‘நமக்கு நாம்’ என்று உருவாகக்கூடிய குறுகிய வட்டங்களை உடைத்து, அன்பிற்கு விடுதலை தரும்வண்ணம் இயேசு பேசுகிறார்.

நாம் ஒருவர் மீது அன்பு கொண்டால், அவர் பதிலுக்கு, நம்மீது அன்பு கொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பது இயற்கை. ஆனால், இயேசு, தன் சீடர்களுக்குச் சொல்லித்தந்த அன்பு, பிரதிபலனை எதிர்பார்த்து காட்டப்படும் அன்பு அல்ல என்பது, தெளிவாகப் புரிகிறது. இந்த அன்பு, நீ-நான்-நாம் என்ற குறுகிய வட்டத்தை விட்டு வெளியேறி, அடுத்தவர், அதற்கடுத்தவர் என்று, மேலும், மேலும் பரந்து, விரிந்து செல்லவேண்டும் என்பதே இயேசுவின் விருப்பம்.

அன்பின் விரிவைப்பற்றி கூறிய இயேசு, அடுத்த வரியில், அன்பின் ஆழத்தையும் தெளிவுபடுத்துகிறார்: "தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை" (யோ. 15:13) உச்சக்கட்ட சவாலாக ஒலிக்கும் இச்சொற்கள், கோடான கோடி உன்னத மனிதர்கள், அன்பின் சிகரங்களை அடைவதற்கு ஓர் உந்து சக்தியாக அமைந்து வருகின்றன.

அந்த உன்னத மனிதர்களில் ஒருவர், புனித டேமியன் தெ வூஸ்டர் (Damien de Veuster). 1850ம் ஆண்டு, ஹவாய் தீவுகளில் வாழ்ந்தவர்கள் நடுவே தொழுநோய் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் ஒரு கூண்டில் அடைக்கப்பட்டு, அருகில் இருந்த மொலக்காய் தீவுக்கு அனுப்பப்பட்டனர். அந்தத் தீவுக்கு அனுப்பப்படுவது, ஏறத்தாழ மரணதண்டனை தீர்ப்புக்குச் சமம். ஏனெனில், அந்தத் தீவில், மருத்துவர், மருந்துகள், குடியிருப்பு என்று எதுவும் கிடையாது. அங்கு செல்லும் அனைவரும், பகலில் சுட்டெரிக்கும் வெயிலிலும், இரவில் கடும் குளிரிலும் துன்புற்று, விரைவில் சாகவேண்டும் என்ற எண்ணத்தில் அங்கு அனுப்பப்பட்டனர்.

அத்தீவில், ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்வதற்கு, இளம் அருள்பணியாளர், டேமியன் தெ வூஸ்டர் அவர்கள், ஆயரால் அனுப்பப்பட்டார். அந்த இளையவர், தச்சுவேலையில் திறமை பெற்றவர் என்பதால், மொலக்காய் தீவில் ஒரு சிற்றாலயம் நிறுவுவதற்கென அங்கு அனுப்பப்பட்டார். அந்தச் சிற்றாலயம், ஏற்கனவே கட்டைகளால் வடிவமைக்கப்பட்டு, கப்பலில் எடுத்துச் செல்லப்பட்டது. அந்த ஆலயத்தை குறிப்பிட்ட ஓரிடத்தில் பொருத்திவிட்டு திரும்பி வந்துவிட வேண்டும் என்று அருள்பணியாளர் டேமியனிடம் ஆயர் கூறியிருந்தார். தீவில் உள்ள தொழுநோயாளர் யாருடனும், எவ்வகையிலும் அவர் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது என்ற கண்டிப்பான கட்டளையுடன் ஆயர் அவரை அங்கு அனுப்பினார்.

தன் 33வது வயதில் மொலக்காய் தீவை அடைந்த இளம் அருள்பணியாளர் டேமியன் அவர்கள், கோவிலை வடிவமைத்துக்கொண்டிருந்த வேளையில், அங்கிருந்த மக்களின் நிலையைக் கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானார். மரக்கட்டைகளைக் கொண்டு இந்த ஆலயத்தை உருவாக்குவதைவிட, அங்குள்ள மனிதர்களைக் கொண்டு, இறைவனுக்கு உயிருள்ள ஆலயத்தை உருவாக்குவது முக்கியம் என்று அவர் எண்ணினார்.

ஆயரின் அனுமதியுடன், அருள்பணி டேமியன் அங்கு தங்கினார். விரைவில், அவர், அம்மக்களின் நம்பிக்கையைப் பெற்றார். அவர்களுக்கு இல்லங்கள் அமைத்துத் தருவதில் தீவிரமாக ஈடுபட்டார்.

ஒரு சில நாட்கள், அல்லது, மாதங்கள் தங்கலாம் என்ற எண்ணத்தில் ஆரம்பமான அவர் பணி, 16 ஆண்டுகள் தொடர்ந்தது. 11 ஆண்டுகள் சென்றபின், ஒருநாள், அவர் குளிக்கச் சென்ற வேளையில், தன் கால்களைக் கொதிக்கும் நீரில் தவறுதலாக வைத்தார். அவரது கால்களில் கொப்பளங்கள் உருவாயின; ஆனால், அவர் அந்த வலியை உணரவில்லை. அன்று, அவர், தானும் தொழுநோயால் பாதிக்கப்பட்டதை உணர்ந்தார்.

வழக்கமாக அவர் திருப்பலியில் மறையுரை வழங்கும்போது, 'தொழுநோயுற்றோர்' என்று பொதுவாகக் குறிப்பிட்டுப் பேசுவார். தனக்கும் தொழுநோய் வந்துவிட்டது என்பதை உணர்ந்த அடுத்த நாள், அவர் கோவிலில் திருப்பலி நிறைவேற்றியபோது, "தொழுநோயாளிகளாகிய நாம்" என்று, அவர்களோடு தன்னை முழுமையாக அடையாளப்படுத்திக்கொண்டார்.

ஐந்து ஆண்டுகள் ஒரு தொழுநோயாளியாக அவர்கள் நடுவே வாழ்ந்த அருள்பணி டேமியன் தெ வூஸ்டர் அவர்கள், 1889ம் ஆண்டு, ஏப்ரல் 15ம் தேதி தன் 49வது வயதில் இறைவனடி சேர்ந்தார். ஒவ்வோர் ஆண்டும், புனித டேமியன் திருவிழா (மே 10ம் தேதி), சிறப்பிக்கப்படும் வேளையில், அன்பின் ஆழத்தைக் குறித்து இயேசு கூறிய சொற்கள், மீண்டும் ஒருமுறை உலகில் எதிரொலிக்கும்: தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை. (யோவான் 15:13)

சில ஆண்டுகளுக்கு முன், இந்தியாவில் ஒரு கண்காட்சித் திடலில் ஏற்பட்டத் தீவிபத்தில் பல பள்ளிக் குழந்தைகள் அகப்பட்டனர். அந்தக் கண்காட்சியைக் காண வந்திருந்த ஓர் இளைஞர், அக்குழந்தைகள் அனைவரையும் காப்பாற்றினார். எரியும் நெருப்புக்குள் பலமுறை சென்று, குழந்தைகளைக் காப்பாற்றியவர், இறுதியில், அந்தப் புகை மண்டலத்தில் மூச்சு முட்டி, மயங்கி விழுந்து, தீயில் கருகி இறந்தார்.

அந்த இளைஞருக்கும், அவரால் காப்பாற்றப்பட்டவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அடுத்தநாள் தன் பெயர் நாளிதழ்களில் புகைப்படத்துடன் வரும் என்ற எதிர்பார்ப்பில், அவர் அந்தத் தியாகச்செயலை மேற்கொள்ளவில்லை. மனித உயிர்களை, அதுவும் பிஞ்சு உயிர்களைக் காக்கவேண்டும் என்ற ஒரே ஓர் உந்துதலால், அவர் இந்த உன்னதச் செயலைச் செய்தார்.

தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை என்று இயேசு சொன்னதன் முழுப் பொருளை உலகிற்கு உணர்த்தியுள்ளார், அந்த இளைஞர். அதாவது, அறிமுகம் ஏதுமற்ற பள்ளிக்குழந்தைகளும் தன் உறவே என்ற உண்மையை உணர்த்த, அவர்களுக்காக தன் உயிரை அந்த இளைஞர் இழந்தார். அந்த இளைஞரைப் போன்று, பல தியாக உள்ளங்கள், அறிமுகமே இல்லாதவர்களைக் காத்த முயற்சியில் தங்கள் உயிரை இழந்துள்ளனர்.

அன்பும், சுயநலமும், ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்று கூறுமளவு, தவறான பாடங்கள் இவ்வுலகில் பெருகிவரும் வேளையில், உலகினர் அனைவரும் நம் உறவுகளே என்ற உண்மை அன்பின் இலக்கணத்தை நமக்குத் தெளிவாக உணர்த்தும் உன்னத உள்ளங்களுக்காக இறைவனுக்கு நன்றி சொல்வோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.