மே,07,2018. இவ்வுலகமெங்கும் அன்பு பரவட்டும் என்ற கருத்தை மையமாக வைத்து, இத்திங்கள் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
''உலகில் அன்பு பரவும் பொருட்டு இறைவா, எங்கள் இதயங்களை மாற்றியமைத்தருளும்' என்பதாக திருத்தந்தையின் இத்திங்கள் தின டுவிட்டர் செய்தி உள்ளது.
மேலும், இஞ்ஞாயிறன்று திருத்தந்தை வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், 'கிரிஸ்துவின் உயிர்ப்பு மகிழ்வின் எளிமையான, மகிழ்ச்சி நிறை தூதுவராகவும், நம்பிக்கையின் பிரதிநிதியாகவும் இருப்பது எந்துணை நன்று' என எழுதியுள்ளார்.
ஏறத்தாழ ஒவ்வொரு நாளும், ஒன்பது மொழிகளில் டுவிட்டர் செய்திகளை வெளியிட்டு வருகின்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இதற்கிடையே, ஜூன் 21ம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவ ஒன்றிப்பை மையமாகக்கொண்டு சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் மேற்கொள்ள உள்ள ஒருநாள் திருத்தூதுப்பயணம் குறித்த விவரங்களை இத்திங்களன்று வெளிட்டுள்ளது திருப்பீடம்.
சுவிஸ் கூட்டமைப்பின் அரசுத்தலைவரால் வரவேற்கப்படும் திருத்தந்தை, WCC எனும் உலக கிறிஸ்தவ ஒன்றிப்பு அவையினருடன் இணைந்து செப வழிபாட்டிலும், கலந்துரையாடலிலும் பங்குபெறுவதோடு, மாலையில் கத்தோலிக்க விசுவாசிகளுக்கு திருப்பலியையும் நிகழ்த்துவார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |