2018-05-09 16:28:00

குடியேற்றதாரர் மனித வர்த்தகர்களிடமிருந்து காப்பாற்றப்படுமாறு


மே,09,2018. சவுதி அரேபியா மற்றும் ஏனைய வளைகுடா நாடுகளுக்குச் செல்வதற்காக, ஒவ்வொரு மாதமும் ஏமன் நாட்டில் நுழையும் ஆயிரக்கணக்கான குடியேற்றதாரர்கள் மனித வர்த்தகர்களிடமிருந்து காப்பாற்றப்படுமாறு விண்ணப்பித்துள்ளது, ஐ.நா.வின் குடியேற்றதாரர் அமைப்பு.

ஒவ்வொரு மாதமும் ஏமன் நாட்டில் நுழையும் ஏறத்தாழ ஏழாயிரம் குடியேற்றதாரர்கள்,  மனித வர்த்தகர்கள் மற்றும் குற்றக்கும்பல்களால் விற்பனைப் பொருள்களாக நோக்கப்படுகின்றனர் என்றும், இக்குடியேற்றதாரர்களுக்கு மிகுந்த பாதுகாப்பு அவசியம் என்றும், IOM எனப்படும், ஐ.நா.வின் குடியேற்றதாரர் அமைப்பு கூறியுள்ளது.

கடந்த வாரத்தில் ஏமனில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட, IOM அமைப்பின், அவசரகால நடவடிக்கைகளின் இயக்குனர் Mohammed Abdiker அவர்கள், இளவயதிலேயே, கடும் துன்பங்களை அனுபவித்த, பல இளம் வயதினரைச் சந்தித்த அனுபவங்களைச் செய்தியாளர்களிடம் விவரித்தார்.

குடியேற்றதாரர்கள், மனித வர்த்தகர்களிடமிருந்து ஒரு பொருளாகவே தெரிகின்றனர் என்றும், எளிதாகவும் விரைவாகவும் பணம் திரட்டுவதிலே அவர்கள் குறியாய் இருக்கின்றனர் என்றும், அம்மக்கள் இறந்தால்கூட அதைப் பற்றி கவலைப்படுவதில்லை என்றும், Abdiker அவர்கள் கூறினார்.

2017ம் ஆண்டில், ஏமன் நாட்டிற்கு ஏறத்தாழ ஒரு இலட்சம் குடியேற்றதாரர் சென்றனர் எனவும், தற்போது அந்நாட்டில் வாழ்கின்ற மொத்த குடியேற்றதாரரின் எண்ணிக்கை சரியாகத் தெரியவில்லை எனவும், Abdiker அவர்கள் தெரிவித்தார்.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.