மே.10,2018. 1993ம் ஆண்டு மே மாதம் 8ம் தேதி முதல், 10ம் தேதி முடிய திருத்தந்தை புனித 2ம் ஜான்பால் அவர்கள், இத்தாலியின் சிசிலியில் மேற்கொண்ட மேய்ப்புப்பணி பயணத்தின் 25ம் ஆண்டு நிறைவு சிறப்பிக்கப்படுவதையொட்டி, அப்பகுதி வாழ் கத்தோலிக்கருக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தந்திச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.
ஆக்ரிஜெந்தோ (Agrigento) உயர் மறைமாவட்டத்தின் பேராயர், கர்தினால் பிரான்செஸ்க்கோ மோந்தேநீக்ரோ அவர்களுக்கு, திருத்தந்தையின் சார்பில், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் இத்தந்திச் செய்தியை அனுப்பியுள்ளார்.
திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள் சிசிலிக்குப் பயணம் மேற்கொண்ட வேளையில், அங்கு செயலாற்றிவந்த மாஃபியா குற்றக் கும்பலைச் சார்ந்தவர்களை மனம் திரும்பும்படி விடுத்த அழைப்பை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மீண்டும் விடுக்கிறார் என்று இந்த தந்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்த வெள்ளி விழாவை நினைவுக்கூர கூடிவரும் விசுவாசிகள் அனைவரும், குற்றக் கும்பல்களுக்கு எதிராகப் பணியாற்றிய அருளாளர், அருள்பணி பீனோ புலீஸி (Pino Puglisi) அவர்களின் வழியைப் பின்பற்றி, நற்செய்தி வழி வாழ உறுதிகொள்ள வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இத்தந்தியில் விண்ணப்பித்துள்ளார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |