மே,14,2018. காங்கோ குடியரசின் பெண் சமூகத்தினருக்கு சிறு விவசாயப் பணிகளை அறிமுகப்படுத்தி, அவர்களின் வருவாய்க்கு வழிவகுக்கும் சூழல்களை உருவாக்கியுள்ளனர், அந்நாட்டில் பணியாற்றும் சலேசியத் துறவுசபையினர்.
காங்கோவின் Ngafula என்ற சிறு நகர், வேறு நகர்களோடு சாலை வசதிகளின்றி துண்டிக்கப்பட்டிருப்பதாலும், அச்சிறு நகரில் தண்ணீர் மற்றும் மின்சாரப் பற்றாக்குறை இருப்பதாலும், அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வழியின்றி இருப்பதாலும், பெண்கள் மேற்கொள்ளக்கூடிய சிறு தொழில்களை ஊக்குவித்து வருவதாக உரைக்கிறது சலேசியத் துறவுசபை.
பெண்கள், பயிரிடுவதற்கென சிறு சிறு நிலங்களை பகிர்ந்தளித்து, அதில் விளையும் காய்கறிகளை சந்தையில் எடுத்துச் சென்று விற்பதற்கு உதவும் இத்துறவு சபை, குடும்பங்களை பட்டினியிலிருந்து காப்பாற்றி வருவதாக தெரிவிக்கிறது.
காய்கறிகளைப் பயிரிடுதல், கோழி வளர்ப்பு ஆகியவற்றிற்கும் பயிற்சியை வழங்குகின்றனர் காங்கோவில் பணிபுரியும் சலேசியத் துறவுசபையினர்.
தேவையான விதைகளையும், விவசாயக் கருவிகளையும், பயிற்சியையும் பெண்களுக்கு வழங்கும் சலேசிய துறவுசபையினர், இதில் வரும் விளைச்சலின் 20 விழுக்காட்டை, கைவிடப்பட்டச் சிறாரைப் பராமரித்து வரும் இல்லத்திற்கு வழங்கவேண்டும் என்ற முன்நிபந்தனையை மட்டும் விதித்துள்ளனர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |