மே 14,2018. மே 13, இஞ்ஞாயிறு 52வது சமூகத் தொடர்பு உலக நாள். 'உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்' (யோவான் 8:32) என்ற தலைப்பையும், "பொய் செய்திகளும், அமைதிக்காக இதழியலும்" என்ற உபதலைப்பையும் கொண்டு, இந்நாள் திருஅவையில் சிறப்பிக்கப்பட்டது. மே 15, இச்செவ்வாய் உலக குடும்பங்கள் நாள். உலகில் அமைதிநிறை சமூகங்களை ஊக்குவிப்பதில் குடும்பங்களின் பங்கு மற்றும் குடும்பங்களின் கொள்கைகளைக் கண்டுணரும் நோக்கத்தில், 1994ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் நிறுவனம், உலக குடும்பங்கள் நாளை உருவாக்கியது. பின்னர், 1995ம் ஆண்டிலிருந்து, ஒவ்வோர் ஆண்டும் மே 15ம் நாளன்று இத்தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது. குடும்பங்களும், சமுதாயங்களும் என்ற தலைப்பில், இச்செவ்வாயன்று இந்த உலக நாள் கடைப்பிடிக்கப்படுகின்றது. குடும்பங்களின் நலன்மீது மிகுந்த அக்கறை செலுத்தும் திருஅவையும், உலக குடும்பங்கள் விழாவைச் சிறப்பித்து வருகின்றது. 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 21 முதல் 26 வரை, அயர்லாந்து நாட்டின் டப்ளின் நகரில் கத்தோலிக்கத் திருஅவை உலக குடும்பங்கள் சந்திக்கும் விழாவைச் சிறப்பிக்கின்றது. குடும்பத்தின் நற்செய்தி, உலகிற்கு மகிழ்ச்சி என்ற தலைப்பில் டப்ளின் நகரில் சிறப்பிக்கப்படும் கத்தோலிக்க உலக குடும்பங்கள் விழாவுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் செல்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இக்காலத்தில் சமூக வலைத்தளங்கள் அதிகமாக ஊடுருவி, குடும்பங்களிலும், சமூகங்களிலும் உறவுகளைப் பாதித்து வருகின்றன என்பது பலரின் ஆதங்கம். இன்றைய நிகழ்ச்சியில், ஊடகமும் உறவும் என்ற தலைப்பில் தன் கருத்துக்களை வழங்குகிறார் அருள்பணி சகாயநாதன், சுல்தான்பேட்டை மறைமாவட்டம்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |