2018-05-16 15:31:00

The barque of Paul நூல் பற்றி திருத்தந்தை பிரான்சிஸ்


மே,16,2018. அருளாளர் திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்களின் கடிதங்களை வாசித்தபோது, அத்திருத்தந்தை, கிறிஸ்துவுக்கும், திருஅவைக்கும் தாழ்ச்சி நிறைந்த  அன்பின் சான்றாக விளங்கியது, தெளிவாகத் தெரிந்தது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

ஜொவான்னி பத்திஸ்தா மொந்தினி (Giovanni Battista Montini) என்ற இயற்பெயரைக் கொண்ட திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்கள் எழுதியுள்ள கடிதங்கள் பற்றி, அருள்பணி லெயோனார்தோ சப்பியன்சா அவர்கள் எழுதியுள்ள, "The barque of Paul" என்ற நூல் பற்றி தன் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இக்கடிதங்களை தான் வியந்து வாசித்ததாகவும், எதிர்ப்புகள் மற்றும் தீவிர மாற்றங்கள் இடம்பெற்ற சமுதாயத்தில், திருஅவை மற்றும் உலகின் தேவைகளில் மட்டுமே திருத்தந்தை கவனம் செலுத்தியுள்ளார் எனவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

தன்னைத் தாக்கியிருந்த கடின நோய், தனது பாப்பிறைப் பணியைச் சரிவரச் செய்வதற்குத் தடையாய் இருப்பதை உணர்ந்த திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்கள், ஆழ்ந்து, சிந்தித்து, மனச்சான்றுபடி, புனித திருஅவையின் அதிமிக நன்மைக்காக, தனது திட்டவட்டமான விருப்பத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார் எனவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

மேலும், திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்களின் மிலான் பேராயர் பணி, குறிப்பாக, அவரின் 15 ஆண்டுகால பாப்பிறைப் பணி பற்றிய, புதியதும், பழையதுமாகிய பல எழுத்துப் பிரதிகளை, அருள்பணி சப்பியன்சா அவர்கள் வெளியிட்டுள்ளார்.

1965ம் ஆண்டு மே 2ம் தேதி, அப்போதைய திருப்பீடச் செயலர் மற்றும் கர்தினால்கள் அவைத் தலைவருக்கென திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், நம் நோய் அல்லது ஏனையத் தடை, பாப்பிறைப் பணியைப் போதுமான அளவு திறம்பட ஆற்ற இயலாமல் ஆக்குகின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.

திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்கள், இதனை எழுதியபோது, அவர் பாப்பிறைப் பணியில் ஈராண்டை நிறைவு செய்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.