2018-05-25 16:19:00

கர்தினால் கிரேசியஸ், இந்திய உள்துறை அமைச்சர் சந்திப்பு


மே,25,2018. இந்திய ஆயர் பேரவைத் தலைவரான மும்பை பேராயர், கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் அவர்கள், இவ்வியாழனன்று, இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களைச் சந்தித்து, இந்தியாவில் கிறிஸ்தவ சமூகத்தில் அதிகரித்துவரும் கவலைகள் குறித்து பேசினார் என ஆசியச் செய்தி கூறுகின்றது. இச்சந்திப்பு குறித்து உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இது, மரியாதை நிமித்தம் நடந்த சந்திப்பு எனத் தெரிவித்துள்ளது.

ஆயினும், இச்சந்திப்பு குறித்து செய்தி வெளியிட்டுள்ள ஊடகங்கள், இந்தியாவில், 2019ம் ஆண்டில் பொதுத்தேர்தல்கள் நடைபெறவுள்ளவேளை, இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது என்று கூறியுள்ளன.

இந்தியாவின் பொதுத் தேர்தல்களுக்காக, டில்லி பேராயர் அனில் கூட்டோ அவர்கள், தனது மேய்ப்புப்பணி அறிக்கையில் ஓராண்டு செபத்திற்கு அழைப்புவிடுத்திருப்பதற்கு தவறான விமர்சனங்கள் எழுந்துள்ளதும், கர்தினால் கிரேசியஸ் அவர்களின் இச்சந்திப்புக்கு ஒரு காரணம் என்று ஆசியச் செய்தி கூறியுள்ளது.

இந்தியாவின் 29 மாநிலங்களில், 21ல் பிஜேபி கட்சித் தலைமையில் ஆட்சி நடைபெறுகின்றது. மேலும், 2017ம் ஆண்டில், நாட்டில், 822 வகுப்புவாத வன்முறைகள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் 111 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.     

இதற்கிடையே, பிஜேபி கட்சியைச் சேர்ந்த பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் நடைபெறுகின்ற இந்த நான்கு ஆண்டுகால(2014-2018) ஆட்சியில், இந்தியாவில் கிறிஸ்தவ சமூகம், இதுவரை எதிர்கொள்ளாத அளவில், தாக்குதல்களை எதிர்கொண்டு வருகிறது என, Wada Na Todo Abhiyan என்ற அமைப்பு வெளியிட்ட 140 பக்க அறிக்கை கூறுகின்றது.

ஆதாரம் : Fides /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.