2018-05-31 15:35:00

திருநற்கருணையில் இயேசுவின் செயல்களின் நறுமணச்சுவை


மே,31,2018. திருநற்கருணை, இயேசுவின் வார்த்தைகள் மற்றும் செயல்களின் எல்லா நறுமணச்சுவைகளையும், அவரின் மரணம் மற்றும் உயிர்ப்பின் சுவையையும், அவரின் ஆவியின் நறுமணத்தையும் கொண்டுள்ளது என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில், இவ்வியாழனன்று வெளியானது.

மேலும், மெஜ்ஜூகோரே (Medjugorje) பங்குத்தளத்திற்கு, சிறப்புப் பண்பைக்கொண்ட அப்போஸ்தலிக்க பார்வையாளராக, போலந்து நாட்டின் வார்சாவா-பிராக் மறைமாவட்ட முன்னாள் ஆயர் Henryk Hoser அவர்களை, இவ்வியாழனன்று நியமித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மெஜ்ஜூகோரே பங்குத்தளத்திற்கு திருப்பீடத்தின் சிறப்புப் பிரதிநிதியாக 2017ம் ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி நியமிக்கப்பட்ட ஆயரின் பணி, இவ்வியாழனன்று காலவரையறையற்று நீடிக்கப்பட்டுள்ளது. 

மெஜ்ஜூகோரே பங்குத்தள விசுவாசிகள் மற்றும், அங்கு திருப்பயணமாகச் செல்லும் விசுவாசிகள்மீது சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டுமென்ற நோக்கத்தில், ஆயர் Hoser அவர்களிடம், இப்பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் யுக்கோஸ்லாவிய பகுதியான போஸ்னியா-எர்செகொவினா குடியரசிலுள்ள மெஜ்ஜூகோரே நகரில், 1981ம் ஆண்டு ஜூன் 24ம் தேதியிலிருந்து அன்னை மரியா காட்சியளித்து வருகிறார் எனச் சொல்லப்படுகின்றது. ஏராளமான பக்தர்கள் திருப்பயணமாக அந்நகருக்குச் சென்று வருகின்றனர். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.