2018-06-01 15:45:00

திருஅவையின் மறைப்பணி அர்ப்பணம் புதுப்பிக்கப்பட வலியுறுத்தல்


ஜூன்,01,2018. 2019ம் ஆண்டு அக்டோபர் மாதத்தை, சிறப்பு மறைப்பணி மாதமாகச் சிறப்பிப்பதற்கு இடம்பெறும் தயாரிப்புகள், உலகளாவியத் திருஅவையின் மறைப்பணி அர்ப்பணத்தைப் புதுப்பிப்பதற்கு மாபெரும் வாய்ப்பாக நோக்கப்பட வேண்டுமென தான் விரும்புவதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாப்பிறை மறைப்பணி கழகங்களிடம் கூறினார்.

பாப்பிறை மறைப்பணி கழகங்கள் உரோமையில் நடத்தும் ஆண்டு பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகளை, இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, அடுத்த ஆண்டு அக்டோபர் சிறப்பு மறைப்பணி மாதம் பற்றி பகிர்ந்து கொண்டார்.

‘திருமுழுக்குப் பெற்றவர்கள் மற்றும் அனுப்பப்பட்டவர்கள் – உலகில் கிறிஸ்துவின் திருஅவையின் மறைப்பணி’ என்ற தலைப்பில், இந்த ஆண்டு பொதுக் கூட்டம் நடைபெறுவது பற்றி குறிப்பிட்ட திருத்தந்தை, மறைப்பணியாற்றுவதற்கு விடுக்கப்படும் அழைப்பு, திருமுழுக்கில் தன் மூலத்தைக் கொண்டுள்ளது என்று கூறினார்.

பாப்பிறை மறைப்பணி கழகங்களின் புதுப்பித்தல் பற்றியும் பேசிய திருத்தந்தை, புதுப்பித்தல் பணி, மறைப்பணியை மையப்படுத்தி உண்மையான படைப்பாற்றலுடன் இடம்பெறுமாறும் கேட்டுக்கொண்டார்.

அடுத்த ஆண்டு அக்டோபர் சிறப்பு மறைப்பணி மாதத்தில், அமேசான் பகுதிக்கென சிறப்பு ஆயர்கள் மாமன்றம் நடைபெறவிருப்பதையும் குறிப்பிட்ட திருத்தந்தை, உலகில் அதிகமாக உரிமை மீறப்படும் இப்பகுதியில், திருஅவையின் நற்செய்தி அறிவிப்புப் பணிக்கு, சிறப்பு ஆயர்கள் மாமன்றம் உதவும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்தார்.

பாப்பிறை மறைப்பணி கழகங்களின் இயக்குனர்கள் மே 28, இத்திங்களன்று தொடங்கிய ஆண்டு பொதுக் கூட்டம், ஜூன் 2 இச்சனிக்கிழமையன்று நிறைவடையும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.