2018-06-04 17:04:00

நிகராகுவாவில் அமைதி நிலவ திருத்தந்தை அழைப்பு


ஜூன்,04,2018. வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில், இஞ்ஞாயிறு நண்பகலில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு மூவேளை செப உரை வழங்கிய பின்னர், நிகராகுவா நாட்டில் அமைதி நிலவுமாறு அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மத்திய அமெரிக்க நாடாகிய நிகராகுவாவில் இடம்பெற்ற வன்முறையில் பலர் உயிரிழந்தும், காயமடைந்தும் இருப்பது குறித்து கவலை தெரிவித்த அமைதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டு ஆயர்களுடன் சேர்ந்து, அனைத்து வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டுமென விண்ணப்பித்தார்.

இந்த வன்முறைகளில் பலியானவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்குத் தனது ஆறுதலையும் செபங்களையும் தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நிகராகுவா அரசுத்தலைவர் டானியேல் ஒர்த்தேகா அவர்கள், கடந்த ஏப்ரலில், ஓய்வூதியங்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பு முறைகளைக் குறைத்ததையடுத்து, அந்நாட்டில் வன்முறைகள் பரவலாக இடம்பெற்று வருகின்றன. இவற்றில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

ஜூன் 02, இச்சனிக்கிழமையன்று, தலைநகர் மானாகுவாவுக்குத் தெற்கே ஏறத்தாழ இருபது கிலோ மீட்டர் தூரத்திலுள்ள மசாயா என்ற ஊரில், கத்தோலிக்க ஆலயத்தில் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள், ஏறத்தாழ முப்பது பேர் அடைக்கலம் தேடியிருந்தனர். அவர்களை, அரசு ஆதரவு புரட்சியாளர்களும், காவல்துறையும் தாக்கியதில் இருவர் ஆலயத்திலேயே இறந்தனர்.

மேலும், ஐ.நா.பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரெஸ் அவர்களும், நிகராகுவாவில் இச்சனிக்கிழமையன்று இடம்பெற்ற வன்முறைக்கு கண்டனம் தெரிவித்த அதேவேளை, ஐ.நா. மனித உரிமை கண்காணிப்பாளர்களை நாட்டில் அனுமதிக்குமாறு விண்ணப்பித்துள்ளர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.