2018-06-06 14:26:00

அருள்பணியாளர்களுக்கு ஆதரவையும் பாசத்தையும் காட்டுவோம்


ஜூன்,06,2018. இயேசுவின் திருஇதயத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள ஜூன் மாதத்தில், அத்திரு இதயத்திடம் நாம் செபிக்குமாறும், அருள்பணியாளர்களுக்கு ஆதரவையும் பாசத்தையும் காட்டுமாறும், இப்புதன்கிழமையன்று அனைவருக்கும் அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில், இப்புதன்கிழமை காலை பத்து மணியளவில் பொதுமறைகல்வியுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவ்வுரையின் இறுதியில் அனைவரையும் வாழ்த்துகையில், அருள்பணியாளர்களுக்கு அன்பையும், பாசத்தையும் வழங்குவதன் வழியாக, இரக்கம்நிறை அன்பே உருவான இயேசுவின் திருஇதயத்தின் சாயலாக அவர்கள் விளங்குதற்கு உதவமுடியும் என்று கூறினார்.

ஜூன் 08, வருகிற வெள்ளிக்கிழமையன்று இயேசுவின் திருஇதயம் பெருவிழா சிறப்பிக்கப்படுவதைக் குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை, இளையோர், வயது முதிர்ந்தோர் மற்றும் புதிதாக திருமணமானவர்கள் தங்களின் வாழ்வுக்குரிய, ஆன்மீக உணவையும், பானத்தையும் இயேசுவின் திருஇதயத்திடமிருந்து பெறுவார்களாக என்று கூறினார். இதனால் அவர்கள், கிறிஸ்துவால் ஊட்டம்பெற்று, இறையன்பால் மாற்றப்பட்ட புதிய மக்களாக ஆவார்கள் எனவும், திருத்தந்தை தெரிவித்தார்.

மேலும், இப்புதன்கிழமையன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், கிறிஸ்துவின் அன்பு மேலெழுந்தவாரியான உணர்வு அல்ல, மாறாக, கிறிஸ்து விரும்பும் முறையில் வாழ்கின்றபோது நாம் வெளிப்படுத்தும் இதயத்தின் எண்ணமாகும் எனத் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.