2018-06-07 16:23:00

அருள்பணியாளர்களுக்காக உலக அளவில் செபமாலை


ஜூன்,07,2018. அருள்பணியாளர்களின் இறையழைத்தல்களுக்காக, ஜூன் 08, இவ்வெள்ளிக்கிழமையன்று, ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளின் அன்னை மரியா திருத்தலங்களில் 24 மணி நேர செபமாலை பக்தி முயற்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வை ஏற்பாடு செய்கின்ற WorldPriest எனப்படும் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், அருள்பணியாளர்களின் குருத்துவப் பணிகளுக்காக இறைவனிடம் இறைஞ்சுவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு எனக் கூறப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கலந்துகொள்ளும், ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளின் அன்னை மரியா திருத்தலங்களில், இவ்வெள்ளியன்று, ஒரு குறிப்பிட்ட அரைமணி நேரத்திற்கு செபமாலையின் ஒரு குறிப்பிட்ட பேருண்மை செபிக்கப்படும்.

அந்நேரத்தில் அருள்பணியாளர்களுக்காக கடவுளுக்கு நன்றி சொல்லி, அவர்கள் எல்லாரையும், அனைத்து அருள்பணியாளர்களின் தாயாகிய அன்னை மரியா, தம் அன்பான பராமரிப்பில் வைப்பதற்காகச் செபிக்கப்படும்.

இவ்வாறு இவ்வெள்ளியன்று 24 மணி நேரமும் செபமாலை பக்தி முயற்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இயேசுவின் திருஇதயம் பெருவிழா நாளை, அருள்பணியாளர்களின் புனிதத்துவத்திற்காகச் செபிக்கும் உலக நாளாக, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், 2003ம் ஆண்டில் உருவாக்கினார். ஜூன் 08, இவ்வெள்ளி, இயேசுவின் திருஇதயம் பெருவிழாவாகும்.

ஆதாரம் : CNA/EWTN /  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.