2018-06-08 16:40:00

உரிமைக்காகப் போராடும் அருள்பணியாளர்க்கு விருது


ஜூன்,08,2018. இலங்கையில், பாலியல் வன்கொடுமைகள் மற்றும், சித்ரவதைகளுக்குப் பலியானவர்களுக்கும், அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கும் ஆதரவாகப் பணியாற்றும் அருள்பணி Nandana Manatunga அவர்களுக்கு, 2018ம் ஆண்டின் Gwangiu மனித உரிமைகள் விருது வழங்கப்பட்டுள்ளது.

தென் கொரியாவில் Gwangiu நகரில் 1980ம் ஆண்டில் இடம்பெற்ற பொது மக்கள் எழுச்சியில் பெருமளவான மக்கள் கொல்லப்பட்ட நாளுக்கு, அடுத்த நாளில், Gwangiu மனித உரிமைகள் மையம் ஆரம்பிக்கப்பட்டது.

அருள்பணி Manatunga அவர்கள் ஆற்றிவரும் மனிதாபிமானப் பணிகள், உலகஅளவில் பெருமளவாகப் பரவியுள்ளதையடுத்து, இந்த விருது வழங்கப்படுவதாக அந்த மையம் அறிவித்துள்ளது.

அருள்பணி Manatunga அவர்கள், பல வகைகளில் உரிமைகள் மீறப்பட்டவர்களைத் தன் குடும்ப உறுப்பினர்கள் போன்று, பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், தன் மையத்தில் வைத்து உதவி வருகிறார் என, மனித உரிமைகள் அலுவலகத்தின் Lucille Abeykoon கூறினார்.

இலங்கையில், 1987 முதல் 1989ம் ஆண்டுவரை இடம்பெற்ற இளையோர் எழுச்சியின்போது, காணாமல்போயுள்ள இளையோரின் குடும்பங்களுக்கு சிறப்பாக உதவி வருகிறார், அருள்பணி Manatunga.

ஆதாரம் : UCAN /  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.