2018-06-08 16:36:00

பன்னாட்டு விண்வெளி வீரர்களுடன் திருத்தந்தை


ஜூன்,08,2018. ISS 53 பன்னாட்டு விண்வெளி ஆய்வு நிலைய விண்வெளி வீரர்கள், மற்றும் அவர்களின் குடும்பத்தினர் 16 பேரை, இவ்வெள்ளி காலையில் வத்திக்கானில் சந்தித்து பேசினார், திருத்தந்தை பிரான்சிஸ். பன்னாட்டு விண்வெளி ஆய்வு நிலையத்தில் பணியாற்றிய இந்த விண்வெளி வீரர்களுடன், கடந்த ஆண்டு அக்டோபர் 26ம் தேதியன்று வத்திக்கானிலிருந்து திருத்தந்தை உரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சந்திப்பில் இத்தாலிய விண்வெளி வீரர் Paolo Nespoli அவர்களுடன், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விண்வெளி ஆய்வுக் கழகத் தலைவர் Paolo Castiglioni, உதவித்தலைவர் Maurizio Saporiti ஆகியோரும் உடனிருந்தனர்.

மேலும், தென் அமெரிக்க நாடான பெருவில், ஜூன் 08, இவ்வெள்ளியன்று, தனது 90வது பிறந்த நாளைச் சிறப்பித்த, விடுதலை இறையியலாளர் அருள்பணி Gustavo Gutiérrez அவர்களுக்கு, தன் கைப்பட எழுதிய வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தொமினிக்கன் துறவு சபையைச் சார்ந்த அருள்பணி Gustavo Gutiérrez அவர்கள், இறையியலுக்கு ஆற்றிய சேவைக்கும், சமூகத்தின் விளிம்புக்குத் தள்ளப்பட்டவர்கள் மற்றும், ஏழைகள் மீது காட்டும் அன்புக்கும், தன் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கத்தோலிக்கத் திருஅவை, ஜூன் 17, ஞாயிறன்று, வாழ்வு நாள் கடைப்பிடிப்பதை முன்னிட்டு, அத்தலத்திருஅவைக்கு செய்தி அனுப்பியுள்ள, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனிதவர்த்தகத்திற்குப் பலியாகும் மக்களின் அழுகுரல்களுக்குச் செவிமடுக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

எல்லா வயதிலும், எல்லா நிலையிலுமிருக்கின்ற மனிதரின் வாழ்வின் மதிப்பு மற்றும் வாழ்வின் பொருள் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதற்கு, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கத்தோலிக்கத் திருஅவை, இவ்வாண்டு மனித வாழ்வு நாளை அர்ப்பணித்துள்ளது.  

மனிதவர்த்தகத்தில் சிக்கியுள்ள மனிதர்களை விடுவிக்குமாறும், இத்தகைய மனிதமற்ற நிலையில் வாழ்பவர்களுக்கு ஆறுதலாக இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ள திருத்தந்தை, மற்றவரின் மாண்பை அங்கீகரித்து, அவர்களிலுள்ள புனிதத்துவத்தை நோக்குமாறு கத்தோலிக்கருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

கருவில் வளரும் அப்பாவி குழந்தைகளைப் பாதுகாப்பதும் தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

பிரிட்டனில் மட்டும், ஒவ்வோர் ஆண்டும் 13 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள், மனிதவர்த்தகத்திற்குப் பலியாகின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.