2018-06-11 16:09:00

நற்செய்தி அறிவிப்பில் முக்கியமான நாயகர் தூய ஆவியார்


ஜூன்,11,2018. அறிவிப்பு, சேவை, கைம்மாறு கருதாமை ஆகிய மூன்றும், நற்செய்தி அறிவிப்பிற்கு மூன்று அடிப்படை கூறுகள் என, திருத்தூதர் பர்னபா விழாவான இத்திங்களன்று மறையுரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், இத்திங்கள் காலையில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பர்னபா நினைவு நாள் திருப்பலியின் வாசகங்கள் (தி.ப.11:21-26;12:1-3,மத்.10:7-13), நற்செய்தி அறிவிப்பில், முதன்மையாளராக இருப்பவர் தூய ஆவியார் என்பதை விளக்குகின்றன என்று கூறினார்.

நற்செய்தி அறிவிப்பு, ஏனைய சமூகத்தொடர்புகள் போல் இல்லையெனவும், தூய ஆவியாரின் செயலால், அந்த அறிவிப்பு, இதயங்களை மாற்றும் சக்தியைக் கொண்டுள்ளது என்றும் மறையுரையில் கூறியத் திருத்தந்தை, மேய்ப்புப்பணி திட்டங்கள் நிறைவானவையாகத் தெரிந்தாலும், அவை, இதயங்களை மாற்றுவதற்குத் திறனற்றவை, ஏனெனில், அவற்றின் முடிவு அவற்றிலே உள்ளன என்றும், அவை நற்செய்தி அறிவிப்பின் கருவிகள் இல்லையென்றும் கூறினார்.

இலாபம் கிடைக்கும் என்ற வர்த்தக எண்ணத்தோடு, இயேசு நற்செய்தி அறிவிக்க நம்மை அனுப்பவில்லை, மாறாக, தூய ஆவியாரோடு அனுப்புகிறார் என்றும், நற்செய்தி அறிவிப்புக்குப் பக்கபலமாக இருப்பது மனித சக்தியல்ல, ஆனால் அப்பணியில் முன்னோக்கிச் செல்ல, தூய ஆவியாரே நமக்குத் துணிச்சலை அளிக்கிறார் என்றும் கூறினார், திருத்தந்தை.

நற்செய்தி அறிவிப்பின் இரண்டாவது கூறு, சேவை மனப்பான்மை என்றுரைத்த திருத்தந்தை, நாம் பல நல்ல காரியங்களைச் சொல்லலாம், ஆனால் சேவையின்றி செய்யப்படுவது நற்செய்தி அறிவிப்பு இல்லை எனவும் கூறினார்.

நற்செய்தி அறிவிப்பின் மூன்றாவது கூறு, கைம்மாறு கருதாத பண்பு என்றும், நற்செய்தி இலவசமாகக் கொடுக்கப்பட வேண்டியது என்றும், தனது சொந்தத் திறமையால் எவரும் மீட்க்ப்பட முடியாது என்றும் உரைத்த திருத்தந்தை, நாம் எல்லாரும் இயேசு கிறிஸ்துவால் இலவசமாக மீட்கப்பட்டுள்ளோம், அதனால் நாமும் இலவசமாக அதை அளிக்க வேண்டும், நற்செய்தி அறிவிப்புப் பணியாளர்கள், இதனைத் தெரிந்திருக்க வேண்டும் என்று கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.