2018-06-13 17:10:00

மாற்றுத்திறனாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது அனைவரின் கடமை


ஜூன்,13,2018. உலகில் ஏறக்குறைய 150 கோடி மாற்றுத்திறனாளர்கள் வாழ்கின்றவேளை,  அம்மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு ஒவ்வொருவருக்கும் தார்மீகக் கடமை உள்ளது என்று, ஐ.நா. பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரெஸ் அவர்கள், இச்செவ்வாயன்று கூறினார்.

மாற்றுத்திறனாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளுக்கு ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இச்செவ்வாயன்று உரையாற்றிய கூட்டேரெஸ் அவர்கள், இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் மட்டும் போதாது, அதனை அமல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

நாடுகள் இந்த ஒப்பந்தத்தை, தங்களின் வளர்ச்சித்திட்டக் கொள்கைகள், முதலீடுகள், சட்டமுறையான அமைப்புகள் ஆகியவற்றுக்குப் பயன்படுத்துகின்றன என்று கூறிய கூட்டேரெஸ் அவர்கள், சமூகத்தின் வளர்ச்சித் திட்டத்தில், யாருமே ஒதுக்கப்பட்டுவிடக் கூடாது என்ற, 2030ம் ஆண்டின் வளர்ச்சித்திட்ட இலக்குகளின் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு நாடுகள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

உலகின் 150 கோடி மக்களைப் புறக்கணிக்கவோ அல்லது ஓரங்கட்டவோ முடியாது என்றும், உலகில் குழந்தை பிறப்பின்போது, ஒவ்வொரு நிமிடத்திற்கும், முப்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் காயமடைகின்றனர் அல்லது மாற்றுத்திறனாளியாக மாறுகின்றனர் என்றும், ஐ.நா. பொதுச்செயலர் தெரிவித்தார்.

ஆதாரம் : UN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.