2018-06-18 16:05:00

புலம்பெயர்ந்தவரோடு உணவைப் பகிர்வோம்


ஜூன்,18,2018. இஞ்ஞாயிறன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், தெளிவான ஒருமைப்பாட்டுணர்வு செயல்களால், புலம்பெயர்ந்தவர் மற்றும் குடிபெயர்ந்தவர்களின் பயணத்தைப் பகிர்வோம் எனக் கூறியுள்ளார்.

இன்னும், வருகிற புதன்கிழமையன்று உலக புலம்பெயர்ந்தவர் நாள் கடைப்பிடிக்கப்படுவதையொட்டி, உலகளாவிய காரித்தாஸ் நிறுவனம், இவ்வாரத்தில், புலம்பெயர்ந்தவர் மற்றும் குடிபெயர்ந்தவர்களுக்கென, பல்வேறு திட்டங்களில் ஈடுபட்டுள்ளது.

ஒரு புலம்பெயர்ந்தவர் அல்லது ஒரு குடிபெயர்ந்தவருடன் உணவைப் பகிர்வோம், அவர்களைச் சந்தித்து, சிறிது நேரம் அவர்களோடு பேசி, அவர்களின் கதைகளைக் கேட்போம் என, உலகில் நன்மனம்கொண்ட அனைத்து மக்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது, உலகளாவிய காரித்தாஸ் நிறுவனம்.

சமூகங்களுக்கும், புலம்பெயர்ந்தவர்களுக்கும், குடிபெயர்ந்தவர்களுக்கும் இடையே உரையாடலையும், புரிந்துகொள்தலையும் ஊக்குவிக்கும் நோக்கத்தில், உலகளாவிய காரித்தாஸ் நிறுவனம், பயணத்தைப் பகிர்வோம் என்ற திட்டத்தை, 2017ம் ஆண்டு செப்டம்பரில் ஆரம்பித்தது.

அதன் ஒரு கட்டமாக, புலம்பெயர்ந்தவர் மற்றும் குடிபெயர்ந்தவருடன் உணவைப் பகிர்ந்து, அவர்களைச் சந்தித்து உரையாடி, இந்த உலக நாளை சிறப்பான முறையில் கடைப்பிடிக்க அழைப்பு விடுத்துள்ளது, காரித்தாஸ் நிறுவனம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.