2018-06-25 14:56:00

இராஞ்சி உயர்மறைமாவட்டத்திற்கு புதிய பேராயர்


ஜூன்,25,2018. இந்தியாவின் இராஞ்சி உயர்மறைமாவட்டத்தின் புதிய பேராயராக, ஜாம்ஷெட்பூர் ஆயர் பீலிக்ஸ் டோப்போ (Felix Toppo) அவர்களை, ஜூன் 24, இஞ்ஞாயிறன்று நியமித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இராஞ்சி உயர்மறைமாவட்டத்தின் பேராயராகப் பணியாற்றிவந்த கர்தினால் டெலஸ்போர் டோப்போ அவர்களின் பணி ஓய்வை, திருஅவை சட்டம் 401,1ன்படி ஏற்றுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவ்வுயர்மறைமாவட்டத்தின் புதிய பேராயராக, இயேசு சபை ஆயர் பீலிக்ஸ் டோப்போ அவர்களை நியமித்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் கும்லா மறைமாவட்டத்திலுள்ள டோங்கோ எனும் ஊரில் 1947ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி பிறந்த புதிய பேராயர் பீலிக்ஸ் டோப்போ அவர்கள், 1968ம் ஆண்டு இயேசு சபையில் சேர்ந்தார். 1982ம் ஆண்டு ஏப்ரல் 14ம் நாளன்று அருள்பணியாளராகத் திருப்பொழிவு செய்யப்பட்ட இவர், 1990ம் ஆண்டில், உரோம் கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில், உளவியலில் முதுகலைப்பட்டம் பெற்றார்.

இயேசு சபையில் நவதுறவு பயிற்சியாளர், சபையில் சேர்கின்றவர்கள் பயிற்சியாளர், இல்லத்தலைவர் போன்ற பல பொறுப்புக்களை வகித்த இராஞ்சியின் புதிய பேராயர், 1997ம் ஆண்டு செப்டம்பர் 27ம் நாளன்று ஜாம்ஷெட்பூர் ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். இவர் அருள்பணியாளராக 36 ஆண்டுகளும், ஆயராக இருபது ஆண்டுகளும் பணியாற்றியிருக்கிறார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.