2018-06-27 15:43:00

மதச் சுதந்திரத்தை நிலைநாட்ட பாடுபடும் திருஅவை


ஜூன்,27,2018. மதச் சுதந்திரமும் மனசாட்சியின் சுதந்திரமும் பல்வேறு வழிகளில் பாதிக்கப்பட்டு வரும் இன்றையச் சூழலில், கத்தோலிக்கத் திருஅவை, நல்மமனம் கொண்டோர் அனைவரோடும் இணைந்து, இந்தச் சுதந்திரங்களை மீண்டும் நிலைநாட்ட பாடுபட்டு வருகின்றது என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் பன்னாட்டு கருத்தரங்கில் உரையாற்றினார்.

வத்திக்கானில் பணியாற்றும் அமெரிக்க தூதரகம், Aid to the Church in Need மற்றும் Sant’Egidio குழுமங்கள் இணைந்து, ஜூன் 25, இத்திங்களன்று உரோம் நகரின் திருச்சிலுவை பல்கலைக் கழகத்தில் ஏற்பாடு செய்திருந்த ஒரு கருத்தரங்கில் நிறைவுரை வழங்கிய திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் இவ்வாறு கூறினார்.

மனித உரிமைகளில் மிகவும் அடிப்படையானது மதச் சுதந்திரம் என்பதை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பல்வேறு உலக அரங்கங்களில் வலியுறுத்தி வந்துள்ளதை கர்தினால் பரோலின் அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

மத உரிமைகள் பறிக்கப்படும் இடங்களில், அடிப்படை மனித உரிமைகளும் பறிக்கப்பட்டு, வன்முறைகள் வளர்வதை கர்தினால் பரோலின் அவர்கள் தன் உரையில் வலியுறுத்திக் கூறினார்.

"அகில உலக மத உரிமையைப் பாதுகாத்தல்: ஒருங்கிணைந்த செயல்பாடுகள்" என்ற தலைப்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், கீழை வழிபாட்டு முறை பேராயத்தின் தலைவர், கர்தினால் லியோனார்தோ சாந்த்ரி அவர்களும், பாகிஸ்தான் கராச்சி பேராயரும் புதிய கர்தினால்களில் ஒருவருமான ஜோசப் கூட்ஸ் அவர்களும் பங்கேற்றனர்.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.